செப்டம்பரில் சுற்றுப்பயணம்.. டெல்டாவில் விஜய் போட்ட திட்டம்.. பின்னணியில் இருக்கும் கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. டெல்டா பகுதியில் இளைஞர்கள் மற்றும் மகளிர் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதால், விஜய் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி மாநாட்டை போல் பிரம்மாண்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் வகையில், மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் சுற்றுப்பயணம்
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கவும் அது இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்தநாளான 17ஆம் தேதியன்று விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் கொள்கைத் தலைவர்களில் பெரியாரும் ஒருவர். இதனால் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளன்று சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார்.
நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
இந்த சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் மண்டல வாரியாக மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப தவெக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்யவும் எளிதாக இருக்கும். அதேபோல் எந்தெந்த பகுதிகளுக்கு செல்வது, யார் யாரை சந்திப்பது, எங்கு கூட்டம் போடுவது, அதற்கான அனுமதி உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகள் முடிவு செய்து தலைமைக்கு அளிக்கவும் செயற்குழுவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்டாவில் முதல் பயணம்
இதனிடையே தவெக தலைவர் விஜய் டெல்டா மாவட்டங்களில்தான் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தவெகவுக்காக தேர்தல் வியூகங்களை மற்றும் பணிகளை ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துக் கணிப்புகள்
அதன்படி வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை விடவும் டெல்டாவில் விஜய்-க்கு அதிக ஆதரவு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக கடந்த சில ஆண்டுகளாகவே பின்னடைவை சந்தித்து வருகிறது. முக்குலத்தோர் சமூக வாக்குகள் மற்றும் சிறுபான்மையின வாக்குகளை அறுவடை செய்ய முடியாமல் அதிமுக தவித்து வருகிறது.
சிறுபான்மை மக்கள் ஆதரவு
சிறுபான்மை மக்கள் மத்தியில் விஜய்-க்கு இருக்கும் ஆதரவை இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கே காட்ட முடியும் என்று தவெக தலைமை நம்புகிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் கோஷ்டி பூசலும் குறைவாக இருப்பதால், தவெக தலைமை முதலில் விஜய் சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளனர்.
தவெக தலைமை முடிவு
இந்த சுற்றுப்பயணத்தின் போது விஜய் கேரவனில் இருந்து மட்டும் பேசாமல், சாலைகளில் நடந்து மக்களுடன் உரையாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா விவசாயிகள் மற்றும் பெண்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் பயணிக்கும் போது, அந்தந்த மாவட்டச் செயலாளரை கூடவே நிற்க வைக்க தவெக முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications