தவெக நிர்வாகக் குழு.. ஓரங்கட்டப்பட்ட பொருளாளர்.. டென்ஷனான விஜய்.. பின்னணியில் ஆதவ் அர்ஜுனா?
சென்னை: தவெகவின் நிர்வாகக் குழுவில் அக்கட்சியின் பொருளாளரான வெங்கட்ராமனின் பெயர் இடம்பெறாதது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வெங்கட்ராமனின் செயல்பாடுகள் மீது விஜய் அதிருப்தியில் இருந்தாலும், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் கொடுந்துயர சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின் தவெக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கரூர் சம்பவம் நடந்த அடுத்த நாள் முதலே தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி அத்தனை பேரும் தலைமறைவாகினர். தவெகவின் மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட யாரும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.

சோசியல் மீடியாவில் மட்டும் சிலர் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், விஜய்யின் அமைதி அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் வெளியில் வருவாரா என்பதே தெரியாததால் தொண்டர்கள் கொந்தளிக்க தொடங்கினர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க தொடங்கினார்கள்.
இறுதியாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து விஜய் ஆறுதல் கூறிவிட்டார். இதையடுத்து நேற்று வழக்கம் போல் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து விஜய் அறிக்கையை வெளியிட்டார். அதன்பின் தவெகவின் எக்ஸ் பக்கத்தில் இருந்து ஒரு பதிவு வெளியாகியது.
அதில் தவெகவின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் புஸ்ஸி, ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அதேபோல் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் உள்ளோரும் இடம்பெற்றுள்ளனர்.
இறுதியாக தவெக உறுப்பினர் என்று மரிய வில்சன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமனின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே மாமல்லபுரத்தின் தனியார் விடுதியில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து விஜய் சந்தித்த போது, வெங்கட்ராமனின் காரினை பவுன்சர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
ஐடி கார்டு காட்டினால் மட்டுமே அனுமதி என்று பவுன்சர்கள் தவெகவின் பொருளாளரிடமே கூறினார்கள். இதன்பின் நீண்ட நேர காத்திருப்புக்கு பின், உள்ளே இருப்பவர்கள் அலைபேசியில் சொன்ன பின், கார் அனுமதிக்கப்பட்டது. தற்போது வெங்கட்ராமன் பெயர் நிர்வாகக் குழுவில் இடம்பெறாதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் வெங்கட்ராமனின் செயல்பாடுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வெங்கட்ராமனின் பெயர் நீக்கத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாகவே மரிய வில்சன் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். இதனால் அவரை அந்த இடத்திற்கு கொண்டு வர காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications