சென்னையில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய இரு வளர்ப்பு நாய்கள்.. உரிமையாளர் கைது
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பூங்கா அருகே காவலாளியின் 5 வயது சிறுமியை இரு வளர்ப்பு நாய்கள் கடித்ததால் தலையில் பலத்த காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நாய்களின் உரிமையாளர், சிறுமிக்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாக கூறியதை அடுத்து சிறுமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது வளர்ப்பு நாய்களுடன் பூங்காவுக்கு வாக்கிங் செல்ல வந்துள்ளார். அப்போது அங்கு பூங்கா காவலாளியின் மகள் சுதிக்ஷா (5) விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவரை இரு வளர்ப்பு நாய்களும் கடித்து குதறின. அப்போது அங்கிருந்த புகழேந்தி நாய்களை தடுக்கவில்லை என தெரிகிறது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு தாய் சோனியா ஓடி சென்று குழந்தையை காப்பாற்றினார். அப்போது அவரையும் அந்த நாய்கள் கடித்தன.
இதையடுத்து தலையில் பலத்த காயங்களுடன் இருந்த சுதிக்ஷாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, சிறுமிக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை முழுவதையும் தானே ஏற்பதாக கூறிய நிலையில் சிறுமி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பிற்காக அந்த வளர்ப்பு நாய்களுக்கு வாயில் கவசம் அணிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அந்த இரு நாய்களும் ஏற்கெனவே அந்த பகுதியில் உள்ள சிலரை கடித்து குதறியதாக புகார்கள் சொல்லப்படுகின்றன. சிறுமியை கடித்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications