சேப்பாக்கம் வேணாம்! கலைஞரின் சொந்த ஊரில் பேரன்.. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வியூகம்! உற்சாக உ.பி.கள்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் உதயநிதியும், தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது தாத்தாவும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தொகுதி மாற்றி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, தனது தாத்தாவும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து போட்டியிடும் எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இது திமுகவினரிடையே மட்டுமல்லாமல், அரசியல் பார்வையாளர்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக ஸ்டாலின்
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அப்போது அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமியை விட 2,734 ஓட்டுகள் அதிகம் பெற்று முதன்முறையாக கொளத்தூரில் இருந்து வெற்றி பெற்றார். அப்போது வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தாலும், அந்த வெற்றி ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
கொளத்தூர் தொகுதி
அதனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனை விட 37,730 ஓட்டுகள் அதிகம் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதன் மூலம், கொளத்தூர் தொகுதியில் திமுகவின் செல்வாக்கு மேலும் வலுப்பெற்றது. பின்னர் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மூன்றாவது முறையாக கொளத்தூரில் போட்டியிட்ட ஸ்டாலின், அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை விட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.
மக்கள் நலத்திட்டங்கள்
கடந்த தேர்தலில் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், கடந்த நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த காலத்தில், ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூருக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகும், மாதம் குறைந்தது ஒரு முறையாவது கொளத்தூர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காண முயற்சி செய்துள்ளார். மேலும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற வேண்டும் என்பதற்காக, கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளை நியமித்து, தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
திமுகவினர் நம்பிக்கை
முதல்வரின் தொகுதி என்பதால், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி கொளத்தூர் பகுதிக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, வரும் சட்டசபை தேர்தலிலும் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றே திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
இந்த நிலையில் தான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருக்கும் உதயநிதி, அடுத்த தேர்தலில் திருவாரூரில் இருந்து போட்டியிடலாம் என கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பதோடு, அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம் என்பது குப்பிடத்தக்கது. மேலும்,. கலைஞர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் இருந்து இரு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின்
இதனால், கலைஞரின் அரசியல் பாரம்பரியத்தை தொடர்ந்து, அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் இருந்து போட்டியிடுவது, திமுகவின் அரசியல் வியூகத்தில் முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில், திமுக தலைமை இறுதி முடிவு எடுக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications