அமைச்சர் சேகர்பாபுவால் எனக்கும் எனது உதவியாளருக்கும் நிறைய வாய் தகராறு! ஒளிவுமறைவின்றி பேசிய உதயநிதி
வாட்ஸ் அப்பிலேயே சேகர்பாபு தேதி வாங்கிவிடுவதால் குழப்பம் வந்திருப்பதாக உதயநிதி ஜாலி பேச்சு.
சென்னை: அமைச்சர் சேகர்பாபுவால் தனக்கும் தனது உதவியாளருக்கும் இடையே நிறைய வாய் தகராறு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
தடுக்கி விழுந்தால் அமைச்சர் சேகர்பாபு மாவட்டத்திற்கு தான் தாம் வருவதாகவும் அந்தளவுக்கு அவர் நிகழ்ச்சிகளை நடத்தி தன்னிடம் தேதி கேட்பதால் அவருக்கும் தனக்கும் தேதி ஒதுக்கீட்டில் நிறைய பிரச்சனை இருப்பதாகவும் மிக ஜாலியாக பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த இயல்பான பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரையும் உற்சாகம் கொள்ள வைத்தது.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் என அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய போது, அமைச்சர் சேகர்பாபுவால் தனக்கும் தனது உதவியாளருக்கும் இடையே நிறைய வாய் தகராறு வந்திருப்பதாகவும் வாட்ஸ் அப்பிலேயே சேகர்பாபு தன்னிடம் தேதி வாங்கிவிடுவதால் தேதி கொடுத்த தகவல் பல நேரங்களில் தனது உதவியாளருக்கே தெரியாமல் போவதாகவும் கூறினார்.

தேதி ஒதுக்கீடு குழப்பம்
மேலும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தனக்கும் தேதி ஒதுக்கீட்டில் நிறைய பிரச்சனை இருப்பதாகவும் அவருக்கு தேதி கொடுப்பதாக நினைத்து வேறு மாவட்டச் செயலாளர்களுக்கு தேதி அனுப்பிவிட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுண்டு எனத் தெரிவிக்கிறார். இப்போது கூட கடந்த 3ஆம் தேதியன்று 70 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தாம் கண்டிப்பாக வந்தாக வேண்டும் என சேகர்பாபு அடம் பிடித்ததாகவும் ஆனால் தாம் 2 மாதங்களுக்கு முன்பே நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்திருப்பதால் அங்கு சென்றாக வேண்டும் எனக் கூறியும் அவர் கேட்கவில்லை என உதயநிதி பேசினார்.

சேகர்பாபு உழைப்பு
இதற்கு காரணம் தேதி குழப்பம் தான் எனக் கூறிய அவர், இதனால் தனக்கு பதில் தனது அம்மாவை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க அனுப்பி வைத்தாக கூறினார். தடுக்கி விழுந்தால் அமைச்சர் சேகர்பாபு மாவட்டத்திற்கு தான் தாம் வர வேண்டியிருப்பதாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு தன்னை அவர் அழைத்து வந்துவிடுவதாக கூறினார். சேகர்பாபுவின் உழைப்பைக் கண்டு பல நேரங்களில் தாம் வியந்துள்ளதாக தெரிவித்தார்.

உதயநிதி வியப்பு
நீங்கள் ஒருவர் தானா இல்லை உங்கள் உருவத்தில் அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா என பல முறை சேகர்பாபுவிடமே தாம் கேட்டிருப்பதாகவும் அந்தளவுக்கு அவரது உழைப்பு இருப்பதாகவும் எப்படி இவரால் மட்டும் முடிகிறது என ஆச்சரியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications