சீமான் கேட்டது சரிதானே.. தேவையில்லாத இடைதேர்தல்கள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்!
காமராஜ் நகர் மற்றும் நாங்குநேரில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது
Recommended Video
சென்னை: நாட்டு மக்களின் பணமெல்லாம் எப்படி வீணாகப் போகிறது என்பதற்கு நாங்குநேரியும், காமராஜ் நகரும் ஒரு சிறு உதாரணம்.
நாங்குநேரியிலும், காமராஜ் நகரிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த எச். வசந்தகுமார், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகி விட்டார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியாகி விட்டது.
புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டசபைத் தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் காமராஜ் நகர் காலியாகி விட்டது.

எம்எல்ஏ
இந்த இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த இவர்களை லோக்சபா தொகுதியில் போட்டியிட வைத்த காங்கிரஸின் முடிவை யாரும் தட்டிக் கேட்க முடியாது, விமர்சிக்கவும் முடியாது.

பணம் செலவு
இப்படி இருவருமே இருந்த தொகுதிகளை விட்டு விட்டு இன்னொரு தொகுதியில் போட்டியிட்டு வென்றதால் தேவையில்லாமல் ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இடைத் தேர்தல் என்றால் சும்மாவா. அதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட வேண்டுமே. சாதாரணமான விஷயமா தேர்தல் நடத்துவது என்பது.

இடைத்தேர்தல்
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்தப் பணியை பாதியில் தூக்கிப் போட்டு விட்டு அடுத்த லெவலுக்கு மாறி விடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அதே மக்கள்தான். காரணம் மக்களின் பணத்திலிருந்துதான் இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

சீமான்
இதைத்தான் சீமான் அன்று கேட்டார். வசந்தகுமார் ஒரு தொகுதியை விட்டு விட்டு அடுத்த தொகுதிக்குப் போய் விட்டார். இப்ப அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த அவர் சொந்தமாக காசு கொடுப்பாரா.. அதையும் மக்கள்தானே கொடுக்க வேண்டியிருக்குமா? இது எந்த மாதிரியான அமைப்பு? இது திணிக்கப்படுகிற தேர்தல்" என்று அதிரடியாக கேட்டார். சீமான் கேட்பது 200 சதவீதம் சரியான கேள்விதான்.

தேவையா?
ஒரு தொகுதியில் உறுப்பினராக இருப்பவர் அடுத்த தொகுதியில் போட்டியிட தடை விதிக்கலாம். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். அதேபோல ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். காரணம், இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி வருகிறது. அதற்கு ஒரு இடைத் தேர்தல். இதெல்லாம் தேவையா என்று மக்கள் குமுறுகின்றனர்.

மக்கள் விரோத செயல்
எனவே இதுபோன்ற செயற்கையான இடைத் தேர்தல்கள் மக்கள் நலனுக்கு நல்லதல்ல. ஒரு வகையில் பார்க்கப் போனால் இதை மக்கள் விரோதச் செயல்களாகவே கருத வேண்டும். மக்களுக்காக சேவை செய்யத்தான் பிரதிநிதிகள். ஆனால் இவர்களோ அவர்களின் பணத்தை இப்படி விரயமாக்குவது போல செயல்படுவது நியாயமா.. யோசியுங்கள் கட்சிகளே.












Click it and Unblock the Notifications