சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
சென்னை: சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதற்கான இடம்தானே தவிர, சொந்த அரசியலை பேசுவதற்கான இடம் கிடையாது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு எம்பி பதவி வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடந்தது, அதற்கான முடிவு எடுக்கப்பட்டது எல்லாமே சட்டமன்றத்தில்தான் நடந்திருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசியலின் மாண்பை முதலமைச்சர் விஜய் உடைத்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன.
நூற்றாண்டு பழமையான தமிழக சட்டமன்றத்திற்கு என சில மாண்புகள் இருக்கின்றன. மொத்த நாட்டுக்கும் முன்னோடியாக இருக்கும் வகையில் ஏராளமான சட்டங்கள் இந்த மன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உழைப்பு இங்கு இருக்கிறது. ஆனால், சட்டமன்றத்தில் எந்த கட்சியும் தனிப்பட்ட அரசியலை பேசியது கிடையாது. அதற்குதான் கட்சி அலுவலகங்கள் இருக்கின்றன.

இருப்பினும் புதியதாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள், சட்டமன்றத்தை கட்சி அலுவலகமாக மாற்றி வருகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக அதிமுகவிலிருந்து விலகிய மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர், தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். சட்டமன்ற வளாகத்தில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்றும், இதன் மூலம் சட்டமன்றத்தின் மாண்பு குறைந்துவிட்டது என்றும் திமுகவினர் விமர்சித்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் சூடு குறைவதற்குள், மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது தவெக. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை எம்பி சீட்டை ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து காங். நிர்வாகிகள் வலியுறுத்தியிருந்தனர். இந்த சந்திப்பு நடந்தது தலைமை செயலகத்தில்தான். அதேபோல, தலைமை செயலகத்தில் விஜய் இருக்கும்போதுதான், காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கப்படுவதாக தவெக தலைமை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அப்படியெனில், தலைமை செயலகத்தில், சட்டமன்றத்தில் வைத்து மக்கள் பிரச்சனையை பேசாமல் சொந்த கட்சி விவகாரங்கள் பேசப்படுகிறதா? என்று திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர்களாக இருந்த கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் இந்த மாண்பை கடைபிடித்தனர். விஜய்தான் இதை உடைத்திருக்கிறார். சொந்த கட்சியின் அரசியல் பேச வேண்டும் எனில், அதற்காகத்தானே கட்சி அலுவலகங்கள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு எதற்காக இதுபோன்று சட்டமன்ற மாண்பை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. அதேபோல, விஜய் மிக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications