"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ".. 7 ஸ்வரங்களின் கான சரஸ்வதியான பாடகி வாணி ஜெயராம்!
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதியாக அழைக்கப்பட்ட வாணி ஜெயராம்
சென்னை: மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் மூலம் புதிய பாடகியாக அறிமுகமான வாணி ஜெயராம் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.
இந்த பாடலை விளம்பரப்படுத்தும் அளவுக்கு வாணி ஜெயராமின் தேன் குரல் அமைந்திருந்தது. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வேலூரில் கலைவாணியாக பிறந்தார். இவரது குடும்பம் ஐயங்கார் குடும்பமாகும். இவர் கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார், டி.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையை கற்றுத் தேர்ந்தார்.
இசையை பயின்று கொண்டே சிலோன் வானொலியில் லதா மங்கேஷ்கர், முகமது ரவி, மன்னா டே ஆகியோரின் பாடல்களை கேட்டு தானும் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை வாணி ஜெயராமுக்கு ஏற்பட்டது.

ராணி மேரி கல்லூரி
இவர் சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இவருக்கு வேலை கிடைத்தது. திருமணத்திற்கு பிறகு பணி மாறுதல் வாங்கிக் கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் இருந்தார். இதையடுத்து வாணி, உஸ்தாத் அஹ்மத் கானிடம் இந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டார்.

வங்கி வேலையை ராஜினாமா
இதையடுத்து தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு தீவிர இசையில் இறங்கினார். வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு நிறுவனமாக சென்ற வாணி ஜெயராமின் குரலை கேட்டவுடன் யாராலும் வாய்ப்பு இல்லை என சொல்லவே முடியவில்லை. 1971 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வெளிவந்த குட்டி என்ற இந்தி படத்தில் வசந்த தேசாயின் இசையில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலை பாடினார். அந்த பாடல் நாயரி ஜெயா பாதூரிக்கு (ஜெயா பச்சன்) பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழிலும் வாய்ப்பு
தமிழகத்தில் பிறந்த வாணி ஜெயராம் இந்தியில் ஹிட்டடித்துவிட்ட நிலையில் தமிழக இசையமைப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பார்களா? அப்படி வந்ததுதான் தீர்க்க சுமங்கலி படத்தில் வெளியான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடலாகும். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் விளம்பரப்படுத்தப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது. அந்த அளவுக்கு அனைவரையும் இந்த குரல் ஈர்த்தது.

வீட்டுக்கு வந்த மருமகள்
இந்த படத்திற்கு முன்பே வெளியான 1973 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்த மருமகள், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் தீர்க்க சுமலங்கலிதான் அவரை பெருமைப்படுத்தி புகழடையச் செய்தது. இவர் பாடாத இந்திய மொழியே இல்லை என சொல்லலாம். மதங்களை கடந்து பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார். சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே எனும் பாடியமைக்காக 1980 இல் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வெளியான கட்டிக் கரும்பே கண்ணா பாடலை பாடியுள்ளார்.

கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம் போன்ற கடினமான பாடல்களையும் பாடியுள்ளஆர். இவர் பாப், பஜனை, நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். பிறந்தது தமிழகமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி , மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காளி உள்ளிட்ட மொழிகளில் பாடியள்ளார். இவருக்கு தற்போது 77 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக இவர் மறைந்தாலும் இவரது பாடல்கள் இந்த வானமும் பூமியும் இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications