உச்சநீதிமன்றமே சொல்லியாச்சு.. ஆணவத்தை கைவிடுங்க ஆளுநரே! - பேரறிவாளன் விடுதலை பற்றி வன்னியரசு கருத்து
சென்னை: ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆளுநர் செய்தது அநீதி.. 142வது பிரிவை கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. பேரறிவாளன் விடுதலை ஆனது எப்படி?
கிடப்பில் போட்ட ஆளுநர்
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?
அப்போது "தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்." என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், "விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு" என்று தெரிவித்தனர்.
அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு பரிந்துரையையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவது ஏன் என கேள்வி எழுப்பியது. எல்லாவற்றையும் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்புவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மோசமான முன்னுதாரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்வி
"பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் அவர் ஏன் சிக்க வேண்டும்? ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட கூடாது. அவரை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நாங்கள் நினைக்கிறோம். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாகவே இருக்கிறது. இதனால் பலமுறை வழக்கை தேவையே இல்லாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது
பேரறிவாளன் விடுதலை
நீண்ட நாட்களாக பல கட்ட விசாரணைக்கு பிறகு பேரறிவாளன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வன்னியரசு கருத்து
இந்த தீர்ப்புகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னியரசு, "பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில அரசின் முடிவே இறுதியானது என்றும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இனியாவது, ஆளுநர் தனக்கு தனித்த அதிகாரம் இருக்கிறது எனும் ஆணவத்தை கைவிட்டு, மாநில அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.