பானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி ஆர்டர் போட்ட டெல்லி ஐகோர்ட்! இன்றே முடிவெடுக்க உத்தரவு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது விசிக. இந்த வழக்கில், விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியில் உள்ள விசிகவை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க விசிகவை திமுக வலியுறுத்தியது. ஆனாலும், 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் பானை சின்னத்திலும் போட்டியிட்டது விசிக .

விசிக சார்பில் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், விசிக பானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இந்த முறையும் பானை சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறது விசிக.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தை வசப்படுத்த 6 மாநிலங்களில் களமிறங்க இருக்கிறது. தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 5, மகாராஷ்ராவில் 1 லோக்சபா தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது விசிக. ஆந்திராவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து வருகிறது விசிக.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. விசிக உட்பட முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30 கடைசி நாள் ஆகும்.
திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக் கோரி விசிக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் பதில் கிடைக்காத நிலையில் விசிக டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியது விசிக. இதனை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. விசிக தொடர்ந்துள்ள வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதனை விசிகவுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம், பானை சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications