நானும் ரவுடிதான் வடிவேலு போல்.. அடுத்த முதல்வர் என்று வண்டியில் ஏறுகிறார்கள்.. விஜயை சாடிய திருமா!
சென்னை: நானும் ரவுடிதான் என்று வடிவேலு வண்டியில் ஏறுவதை போல் நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக் கொண்டு வண்டியில் சிலர் ஏறிக் கொண்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். என் உயரம் எனக்கு தெரியும் என்று கூறிய திருமாவளவன், தவெக தலைவர் விஜயையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விசிக மாவட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக, இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் பேட்டி
விஜய், அதிமுக உள்ளிட்டோரிடம் இருந்து அழைப்பு வந்த போதும் கூட, நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று திருமாவளவன் அறிவித்தார். அதேபோல் பாமக மற்றும் பாஜக கட்சிகள் உள்ள கூட்டணியில் விசிக இருக்காது என்றும் தெளிவாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமாவளவன் பங்கேற்றார்.
அடுத்த முதல்வர் வண்டி
அப்போது திருமாவளவன் பேசுகையில், கட்சிக்கான ஒரு பேனர் அறிவித்த உடன் முதல்வராகிவிடலாம் என்று நினைத்துவிடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்களை நீ தான் அடுத்த முதல்வர் என்று உசுப்பிவிடுகிறார்கள். அண்ணா ஒரு முறை, கருணாநிதி 5 முறை, ஸ்டாலின் ஒருமுறை என்று 7 முறை திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்று சொன்னால், அது ஒன்றும் அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயமல்ல.
என் உயரம் எனக்கு தெரியும்
ஏன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொல்வதில்லை, ஏன் உங்களுக்கு ஆசை வரவில்லை என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நானும் ரவுடிதான் என்று வண்டியில் ஏறுவதை போல் எல்லோரும் ஏற முடியாது. என் உயரம் எனக்கு தெரியும். அப்படி சில பேர் நான்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் வண்டியில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..
திமுக நெருக்கடி
இது ஒரு வகையான மன நோய். பிராக்டிக்கலாக முடியாத சில விஷயங்களை, முடியும் என்று கற்பனை செய்து கொண்டு கொள்கை அறிக்கை, பட்ஜெட் எல்லாம் வெளியிடுவார்கள். திமுக இவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்தும், எத்தனை தோல்விகளை சந்தித்துள்ளது. திமுக எத்தனை நெருக்கடிகளை சந்தித்து நிமிர்ந்து நிற்கிறது என்று பார்க்கும் போது, கருணாநிதி மிகப்பெரிய ஆளுமையாக நிற்கிறார்.
கருணாநிதியின் ஆளுமை
திமுக ஆட்சிக்கு வந்து கருணாநிதி முதல்வரான பின், எம்ஜிஆர் மூலமாக மிகப்பெரிய பிளவை சந்தித்தார். அந்த நேரத்தில் எம்ஜிஆர் செல்வாக்கு மிகுந்த கதாநாயகர். அதனை எதிர்கொண்டு 12 ஆண்டுகள் போராடி, மீண்டும் திமுகவை உச்சத்திற்கு கொண்டு வந்தார். வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய போதும், மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. மேல் இருந்து கீழ் வரை பலரும் விலகினர். அந்த நிலையிலும் கூட திமுகவை சிதறவிடாமல் கட்டி காத்தவர் கருணாநிதி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications