தமிழகத்தில் வடக்கர்கள் அராஜகம்! உள் அனுமதி சீட்டு ஒன்றே இதற்கு தீர்வு! கொதிக்கும் வேல்முருகன்!
சென்னை: தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே போவதால் உள் அனுமதி சீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் ஒருவரை இறால் பண்ணையில் பணியாற்றும் வட மாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தனது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஆதங்கத்தை வெளியிப்படுத்தியிருப்பதாவது;

திணறுகிறோம்
தமிழ்நாட்டுத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம்.
தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் மேலும் உயர்ந்து வருவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

மீனவப் பெண்
இச்சூழலில், ராமேசுவரம் அருகேயுள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப்பெண் சகோதரி சந்திராவை, அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

குற்றச்செயல்கள்
கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு காவல்துறையினரைத் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அப்போதே, தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் நடத்தும் ஆக்கிரமிப்புகளும், குற்றச்செயல்களும் எவ்விதக் கேள்விமுறையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.

உள் அனுமதி சீட்டு
அதோடு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மீனவப்பெண் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ரூ.50 லட்சம்
மீனவப்பெண் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வடமாநில இளைஞர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications