டி.பி.சத்திரத்திற்கே நேரில் வந்து நிவாரண பொருட்களை வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! பயனாளி நெகிழ்ச்சி
சென்னை: நான் உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து நிவாரணங்களை வழங்காமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்களை பனையூருக்கு வரவழைத்து நிவாரணங்களை வழங்கியது ஏன் என்பது குறித்து நடிகர் விஜய் விளக்கமளித்ததாக நிவாரணம் பெற்ற நபர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை கண்டறிந்து சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு அழைத்திருந்தார் விஜய். அவர்களை பேருந்து மூலம் கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.

அவர்களின் குறைகளை கேட்ட விஜய் ஒவ்வொருவருக்கும் நிவாரண பொருட்களை, தானே தனது கைகளால், வழங்கினார். நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் இருந்தன. இதுவரை புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு என எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சியினர்தான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குவார்கள்.
ஆனால் விஜய் புது முயற்சியாக பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சி அலுவலகத்திற்கு சொந்த செலவில் அழைத்து வந்து அவர்களுக்கு உணவு அளித்து அந்த மக்களுடன் எந்த இடையூறும் இல்லாமல் பேசினார். இந்த நிலையில் விஜய்யே நேரில் போய் நிவாரணம் கொடுக்காமல் ஏன் அவர்களை வரவழைத்து கொடுத்தார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் நிவாரணம் பெற்றவர்களிடம் விஜய் பேசியது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் விஜய் கூறியதாக அந்த நபர் கூறியதாவது: "நான் நேரில் வந்து உங்களை சந்தித்து நிவாரணம் வழங்காமல், என் இடத்திற்கு உங்களை வரவழைத்து நிவாரணம் கொடுக்கிறேன் என யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.
உங்கள் வீடுகளுக்கே நானே நேரில் வந்து நிவாரணங்களை வழங்கியிருக்கலாம். ஆனால் நான் நேரில் வந்திருந்தால் உங்களுடன் அமர்ந்து என்னால் சகஜமாக பேசியிருக்க முடியாது.
அங்கு வந்திருந்தால் நெரிசல் ஏற்பட்டிருக்கும்.உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேசியிருக்க முடியாது. நேரம் செலவிட முடியாது. அதனால்தான் உங்களை இங்கே வரவழைத்தேன்" என்றாராம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் அனிதா நீட் தேர்வுக்கு போராடி தனது மருத்துவ கனவு கானல் நீராகிவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதை கேள்விப்பட்ட விஜய், அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று தந்தை, அண்ணனை சந்தித்து ஆறுதல் கூறினார். அது போல் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தின் போது சென்னை மெரினாவுக்கு முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அந்த வகையில்தான் மாணவி ஸ்னோலினின் தாயை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதால் அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். அது போல் கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கினாலும் விஜய், பாளையங்கோட்டைக்கு நேரில் போய் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார்.
பாளையங்கோட்டைக்கு விஜய் சென்றுவிட்டு வெளியே வரும் போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் இரு இடங்களில் கீழே விழ பார்த்தார். ஆனால் சுதாரித்துக் கொண்டார். இதனால் விஜய் பொது இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications