150+ எம்எல்ஏக்கள் சப்போர்ட்.. அசுர பலத்தில் தவெக! செம ஹேப்பியாக விஜய்! எஸ்பி வேலுமணி எடுத்த முடிவு!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் இந்த நம்பிக்கையை வாக்கெடுப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருப்பதாக சொல்கின்றனர். தற்போதைய சூழலில் விஜய்க்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு மட்டும் அல்லாது அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 150+ எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் எந்தவித சிக்கலும் இன்றி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வரும் நிலையில், இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
முதல்வர் விஜய்
ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முக்கிய திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது.
தவெக அரசு
இதேபோல் இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தன. இதன் மூலம் தவெக கூட்டணியின் பலம் 120 ஆக உயர்ந்தது. அதன் பின்னரே விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் ஆட்சி அமைந்த பிறகும் சிக்கல்கள் குறையவில்லை. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் தவெகவின் எண்ணிக்கை குறைந்தது.
எம்எல்ஏ சீனிவாச சேதுபதி
மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் தற்போது தவெகவின் உறுதியான பலம் 106 ஆக குறைந்துள்ளது. இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 119 உறுப்பினர்களின் பலம் இருப்பதாக தவெக தரப்பு நம்பிக்கையுடன் கூறி வருகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
பெரும்பான்மை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது என்பதால், தற்போதைய கணக்கில் விஜய் அரசுக்கு சிக்கல் இருக்காது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதற்கிடையில், அதிமுகவில் உருவாகியுள்ள உள்கட்சி குழப்பமும் இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் குழு, தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமமுக எம்எல்ஏ காமராஜ்
இந்த அணியில் சுமார் 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுவது அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. அதேபோல், அமமுக ஒரே எம்எல்ஏவான காமராஜும் சட்டப்பேரவையிலேயே தவெக அரசுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளார். "தமிழக இளைஞர்களைப் போல நாங்களும் விஜய்யை நம்புகிறோம்" என்று அவர் கூறியிருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக ஆதரவு
இந்த சூழலில், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போர் எண்ணிக்கை 150-ஐ கூட எட்டக்கூடும் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு எளிதாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மற்றொரு பக்கம், திமுக, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல்
அப்படி நடந்தால், தவெக அரசின் பெரும்பான்மை இன்னும் வசதியான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு மிகப்பெரிய அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பை வெற்றிகரமாக கடந்து விட்டால், தமிழக அரசியலில் புதிய சக்தியாக தவெக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications