கரூர் துயரம்: 8 மணி நேர சந்திப்பு முடிந்தது! குடையுடன் வந்த விஜய்! என்ன பேசினார்? கசிந்த தகவல்
சென்னை: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 பேரின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் ரிசார்ட்டில் சந்தித்த தவெக தலைவர் விஜய், 8 மணி நேரம் கழித்து குடை பிடித்தபடியே வெளியே வந்தார். அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்திக்கவே இல்லை என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். அது நியாயமும் கூட! இந்த நிலையில் விஜய் கரூர் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்தார்.

இதற்காக 5 சொகுசு பேருந்துகள் மூலம் 33 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சென்னை அழைத்து வரப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டனர்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு விஜய் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு வருகை தந்தார்.
அங்கு அவர் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கியிருந்த அறைகளுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இவ்வாறு இந்த சந்திப்பு கூட்டம் தற்போது 6 மணிக்கு முடிந்தது. அதாவது சுமார் 8 மணி நேரம் சந்தித்தார். இதைத் தொடர்ந்து தனியார் விடுதியில் இருந்து குடைபிடித்தபடியே விஜய் வெளியே வந்தார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய மீடியாக்களுக்கு அனுமதி இல்லை. எனினும் அந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது என்னவெனில், விஜய் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் 30 நிமிடங்கள் பேசினாராம்.
அவர்களிடம், "உங்கள் இழப்பை என்னால் ஈடு செய்யவே முடியாது. உங்கள் குடும்பத்தினருக்கு நான் கடைசி வரை துணையாக இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். கல்வி, திருமணம் என அனைத்து செலவுகளையும் ஏற்பேன்" என வாக்குறுதி கொடுத்தாராம்.
அது போல் சில குடும்பத்தினர் தங்கள் உறவினர் இறக்கும் போது எப்படி சிதைந்திருந்தார் என்று கூறுவதை கேட்ட விஜய், கண்ணீர் விட்டு அழுததுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம். இதனால் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனராம்.
அவர்களிடம் விஜய், "கடைசி வரை நானும் எனது கட்சியும் உங்களுடன் இருப்போம்" என உருக்கமாக தெரிவித்தாராம். ஆனால் விஜய் யார் காலில் விழுந்தார் என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டனர். இந்த நிகழ்வு முடிந்ததும் தயாராக இருந்த வாகனங்களில் கரூருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அது போல் விஜய்யும் அங்கிருந்து குடை பிடித்தபடியே வெளியே வந்தார். இந்த சந்திப்பு கூட்டமானது 8 மணி நேரம் நடந்தது.












Click it and Unblock the Notifications