அப்படியே ஜெயலலிதாவாக மாறும் விஜய்? தவெக மா.செ.வை மன்னிப்பு கேட்க வைத்து.. வேலுவால் வந்த வினை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வீட்டுக்கு அமைச்சர் எவ வேலு சென்றது தான் தற்போது திமுகவிலும் தவெகவிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதவியில் இருந்து தூக்கி அடிப்பதாக விஜய் எச்சரித்த நிலையில் மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கிறார் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரான பாரதிதாசன். அரசியல் நாகரீகம் இல்லாமல் மாவட்ட செயலாளரை, மன்னிப்பு கேட்க வைத்ததாகவும், ஜெயலலிதா போல விஜய் நடந்து கொள்கிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருப்பவர் பாரதிதாசன். தற்போது மட்டுமல்ல விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருக்கிறார்.
புஸ்ஸி ஆனந்த் வருவதற்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். சந்திரசேகரின் செல்லப்பிள்ளை பாரதி என்பார்கள் திருவண்ணாமலை விஜய் ரசிகர்கள். அவரது அக்கா கூட அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவினருடன் நெருக்கமாக இருந்த அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

விஜய் கட்சி
கொலை வழக்கும் இவர் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் விஜய் கட்சி ஆரம்பித்தபோது அவரை தெற்கு மாவட்ட செயலாளராக ஆக்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் புதிதாக பிரம்மாண்ட பங்களா கட்டி குடியேறினார் பாரதிதாசன். அந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து இருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
எவ வேலு
ஆனால் அதைவிட பரபரப்பை கிளப்பியது அமைச்சர் எவ வேலுவின் வருகை. புஸ்ஸி ஆனந்துக்கு ஒரு மாலை என்றால் எவ வேலுவுக்கு பண மாலை, மயில் தோகை மாலை என மூன்று வகை மாலைகளை அணிவித்து காலில் விழுந்து அதிர்ச்சி கொடுத்தார். இது தொடர்பாக தலைமைக்கும் புகார் பறக்க பதவியில் இருந்து விலக வேண்டும்.. இல்லை என்றால் நாங்களே நீக்கி விடுவோம் என விஜய் நேரடியாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
மன்னிப்பு
இதனால் பதறிப்போன பாரதிதாசன் அமைச்சர் குடும்ப நண்பர் என்பதால் விழாவுக்கு வரவழைத்து தவறுதலாக மாலை அணிவித்தேன். தலைவரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி என் குடும்ப விழாவாக இருந்தாலும் கட்சி சொந்தங்களை தவிர வேறு யாரையும் அழைக்க மாட்டேன்" என அறிக்கை விட்டிருக்கிறார்.
ஜெயலலிதா
தற்போதைய சூழலில் திமுகவினர் நிகழ்ச்சிகளில் அதிமுகவினரும், அதிமுகவினர் இல்ல நிகழ்ச்சிகளில் திமுகவினரும் கலந்து கொள்வது சாதாரணமாக நடக்கிறது. ஏன் பலமுறை முதல்வர் பதவியேற்பு விழாக்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஸ்டாலினே நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் தனது மாவட்ட செயலாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது ஜெயலலிதாவை போல தன்னை நினைக்கிறாரா என்ற விமர்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தம்பிதுரை
கடந்த காலங்களில் அதிமுகவினர் திமுகவினருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தாலே அடுத்த நாள் அவர்கள் பதவி இருக்காது. மேலும் எவ்வளவு பெரிய விசுவாசியாக இருந்தாலும் அவர்களை தூக்கி அடிக்க ஜெயலலிதா தயங்கியதும் இல்லை. உதாரணத்திற்கு துணை சபாநாயகர் அளவுக்கு பதவியில் அமர்த்தி அழகு பார்த்த தம்பிதுரையின் மகள் கல்யாணத்தையே புறக்கணித்தவர் ஜெயலலிதா. காரணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகனுக்கு தம்பி துரையின் மகளை திருமணம் செய்து வைத்ததால் அந்த திருமணத்திற்கே ஜெயலலிதா செல்லவில்லை.
எசக்கி சுப்பையா
இது மட்டுமல்ல இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த எசக்கி சுப்பையா கட்சி பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார் காரணம். திமுகவினருடன் தொடர்பில் இருக்கிறார் என்ற புகார் தான். மேலும் திமுகவினருக்கு காண்ட்ராக்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாகவும், சில நில அபகரிப்பு செயல்களில் ஈடுபட்டதாகவும் உளவுத்துறை தகவல் கொடுக்க அடுத்த நாளே கட்சி பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார் இசக்கி சுப்பையா.
சசிகலா புஷ்பா
இதே போலத்தான் ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் ஆண்டு சசிகலா புஷ்பாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். திமுக எம்பி திருச்சி சிவாவை விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்தது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக எம்பி கனிமொழியுடன் சசிகலா புஷ்பா நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்ற தகவல் காரணமாகத்தான் இந்த பதவி நீக்கம் இருந்தது என்கிறார்கள்.
பயந்த அமைச்சர்கள்
அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு மட்டும் இரண்டே மாதங்களில் 14 அமைச்சர்கள் பதவி மாற்றம் செய்யப்பட்டதோடு சிலர் அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட்டனர். அவர்கள் திமுகவினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு தான் காரணம். அதிமுகவினர் தங்களை கண்டாலே அஞ்சுவார்கள் என துரைமுருகனே கூறி இருக்கிறார். ஒரு முறை விமான நிலையத்திலிருந்து விமானத்திற்கு செல்ல பேருந்தில் சென்றபோது அதே பேருந்தில் சில அதிமுக அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள். துரைமுருகன் இருப்பதை பார்த்துவிட்டு பயந்து போய் பின் சீட்டில் போய் உட்கார்ந்தார்கள் என சிரித்தவரே துரைமுருகன் கூறி இருக்கிறார்.
அரசியல் அதிரடி
இது போல பல அதிரடிகளை ஜெயலலிதா அரங்கேற்றினார் என்பது, அப்போதைய அரசியலை கவனித்த பலருக்கும் தெரியும். சிறு புகார் வந்தால் கூட அடுத்த நாள் காலையில் பேப்பரில் அந்த அமைச்சரும் மாவட்ட செயலாளரும் நீக்கப்பட்டார் என்ற செய்தி வந்திருக்கும். அதனால் அதிமுகவினர் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள்.
விஜய் மீது விமர்சனம்
தற்போது அதையே விஜய் செய்து வருகிறார் என்கின்றனர். அரசியல் நாகரீகம் கருதி இந்த பிரச்சனையை அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் மாவட்ட செயலாளரை மன்னிப்பு கேட்க வைக்கும் அளவுக்கு விஜய் செல்வார் என நாங்களே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்.












Click it and Unblock the Notifications