விஜய்யின் மனது மேடையில் இல்லை.. என்னை நோக்கியே இருந்துள்ளது.. விஜய் பேச்சுக்கு திருமா பதிலடி
சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்காதது மற்றும் மேடையில் விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், திருமா குறித்து விஜய் கூறிய கருத்துக்கு, விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருமாவளவன் பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், விஜயும் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

திருமாவளவன் பங்கேற்காததற்கு அரசியல் அழுத்தமே காரணம் என்று பல்வேறு விவதாங்கள் எழுந்தன. மேலும், புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடுகிறார் என்பதால்தான் திருமா பங்கேற்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்த திருமாவளவன், நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியுள்ளதாவது: விஜய்யின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்துள்ளது என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தாலும் நான் எங்கே இருக்கிறேன் என எண்ணிக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த நிழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பது விஜய்க்கு வருத்தம். ஒரு ஆதங்கம் அவருக்கு உள்ளது. அதனால், அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.
எனக்கு எந்தவிதமான நெருடலும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன் கருதி, கூட்டணியின் நலன் கருதி, சனாதன சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் இருக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவிலே நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு விஜய் சொல்வது போல எந்தவொரு அழுத்தமும் காரணமில்லை.
நான் சுதந்திரமாக எடுத்த முடிவு அது. விகடன் பதிப்பகத்தாரிடம் ஏற்கனவே இதுகுறித்து தொடக்கத்திலேயே விளக்கி சொல்லியிருக்கிறேன். விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிற சூழல் எழுந்தால், இதை வைத்து அரசியல் செய்யக்கூடிய சிலர், அதற்கான செயல் திட்டத்தை வகுத்து காத்துக் கொண்டிருக்கிற சிலர் திரிபுவாதம், திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது.
அதற்கு இடம் தரக்கூடாது எனும் வகையில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு விளக்கி கூறியுள்ளேன். விஜய் சொல்வதுபோல திராவிட முன்னேற்றக் கழகமோ, திமுக கூட்டணி கட்சிகளோ எந்த அழுத்தமும் எனக்குத் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கிற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ, திருமாவளவனோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications