ராஜ்யசபா சீட் எங்கள் உரிமை.. நல்ல செய்தி வரும்.. பிரேமலதா பரபர பேச்சு.. டக்கென திரும்பும் அதிமுக!
சென்னை: மாநிலங்களவை சீட் கேட்பது எங்கள் உரிமை எனக் கூறியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் பிரேமலதாவின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தேமுதிக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை: வி.இளங்கோவன், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், ப.பார்த்தசாரதி ஆகியோர் தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 தொகுதிகளை தேமுதிகவினர் கேட்டதாகவும், அது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கலந்தாலோசித்து சொல்வதாக அதிமுகவினர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன்செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். இப்போதும், எதிர்காலத்திலும் தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
பிரேமலதா பேட்டி: இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வந்தால் கூட்டணிக்காக கட்சிகள் வருவது இயற்கை. தேமுதிக உடன் கூட்டணி அமைக்க அதிமுக தலைவர்கள் வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தார்கள். எங்கள் கட்சி சார்பில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு, பார்த்தசாரதி, மோகன்ராஜ், இளங்கோவன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்துவிட்டு வந்துள்ளனர்.
ராஜ்யசபா சீட் எங்கள் உரிமை: இன்னும் ஒரு வாரத்திற்குள் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பதை உங்களிடம் தெரிவிப்பேன். ராஜ்யசபா சீட் குறித்து உறுதி செய்யப்படாத செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன. எங்கள் உரிமையை கேட்பது எங்கள் கடமை. தமிழ்நாட்டை பொறுத்தவரை அத்தனை அரசியல் கட்சிகளிலும் ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். அந்த அடிப்படையில் தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்பதை கேட்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
வெகு விரைவில் எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். அதிமுக அழைப்பின் பெயரில் எங்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள். எங்களுக்கு தர வேண்டிய ராஜ்யசபா சீட்டை தர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லி உள்ளோம். நல்ல செய்தி வரும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.
பாஜகவுடன் நட்புறவு: பாஜகவை சேர்ந்த அனைத்து தலைவர்களுமே கேப்டன் கோயிலுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளனர். பாஜகவைப் பொறுத்தவரை அழைப்பு விடுத்துக்கொண்டுதான் உள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்ததால், மரியாதை நிமித்தமாக எங்கள் நிர்வாகிகளையும் அதிமுக அலுவலகத்திற்கு அனுப்பினோம்.
பாஜகவுடன் திரை மறைவில் பேசவில்லை, அவர்களும் எங்கள் உடன் நல்ல உறவில்தான் உள்ளார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 4 வழிகள்தான் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, தனித்து போட்டியிடுவது என 4 வழிகள் தான் உள்ளன. இதில் திமுக கூட்டணி ஏற்கெனவே முடிந்துவிட்டது. மீதி மூன்று வழிகள்தான் உள்ளது. கட்சிக்கு எதைச் செய்தால் நன்மையோ அதை செய்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக இருந்ததாகவும், தேமுதிக கேட்டுக்கொண்டதன்படி 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், கடந்த முறை தேமுதிக போட்டியிட்ட வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்யசபா சீட் குறித்த பிரேமலதாவின் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications