அப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான்.. மாயமான உறவுகள்.. பாழாய்ப்போன நாகரீகத்தால்
சென்னை: உறவுகளின் பெயர்களை போடாமல் சிம்பிள் என்ற பெயரில் திருமணம் உள்ளிட்ட இல்ல விஷேசங்களின் பத்திரிக்கைகளை அடிக்கிறார்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் தங்கள் உறவுகள் யார்? யார்? என்பதே தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். உறவுகளை தொலைக்கும் நமது நாகரீக சுபமுகூர்த்த பத்திரிக்கைகள் பற்றி இப்போது பார்ப்போம்.
முன்பெல்லாம் திருமணம் உள்ளிட்ட இல்ல சுபமுகூர்த்த பத்திரிக்கைகளில் தாய்மாமன்கள் தொடர்ச்சி, அத்தை மாமக்கள், சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி தொடர்ச்சி என உறவுகளின் பட்டியலே பெரிதாக இருக்கும்.
இதில் சாதிய மற்றும் சொந்த உறவுகளை தாண்டி, வரவேற்பாளர்கள் தொடர்ச்சி என ஊரில் உள்ள பலரது பெயர்கள் கட்டாயம் இருக்கும். இதில் என்பெயரை ஏன் போடலை என்று சண்டைகளும் வரும்.

தாய்மாமன்கள்
அத்தனை உறவுகளும், பத்திரிக்கைகளில் பெயர் போட்டதுக்காகவே காது குத்து, திருமணம் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் வருவார்கள். அப்படி வருபவர்களை நமது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, இவர் தான் உன் சித்தப்பா, இவர் தான் உன் மாமா, இவங்க தான் உன் அத்தை, இவங்கதான் உன் பெரியப்பா, இவரு உனக்கு அண்ணன் வேணும்பா என சொல்லிக்கொடுப்போம்.

உறவுகள் பங்கேற்பு
அவர்களும் பாசத்தோடும், உரிமையோடும் விஷேசங்களில் கலந்து கொண்டு இல்ல நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக நிறைவு செய்வார்கள். இதன் மூலம் உறவுகளில் நடக்கும் ஒவ்வொரு வீட்டு விஷேசமும், எல்லாருக்குமே திருவிழா போல் இருக்கும். இதன் மூலம் உறவுகளுடனான பழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கும். தோழமையாகவும், ஆறுதலாகவும் உறவுகள் தோள் கொடுப்பார்கள்.

ரத்த உறவுகள் மட்டும்
இப்போது அப்படியல்ல, இன்றைய தலைமுறையினர் பலர் நாகரீகம் என்ற பெயரில், உறவுகளின் பெயர்கள் யாரையும் போடாமல், அப்பா,அம்மா, தம்பி, தங்கை என ரத்த உறவுகளோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் இல்ல விஷேசங்கள் குறைவான உறவுகளே வரும் நிகழ்வாக மாறிவிட்டது. இத்துடன், உறவுகள் யார்? யார்? என்பது தெரியாமல் ஒரு தலைமுறையே வளர்ந்துவிட்டார்கள்.

சொந்தம்
தங்களுக்கு கிடைத்த, தாத்தா பாட்டி, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், அக்கா என எந்த உறவையும் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு சொந்தம் என்பது ரத்த சொந்தம் மட்டுமே சொந்த என்ற அளவுக்கு மாற்றிவிட்டார்கள்

மனிதம் வளர்ப்போம்
இப்போது சொல்லவருவது ஒன்றை கருத்தே.. உறவுகளை விழாக்களில் கூட சொல்லாவிட்டால், மனிதர்களை எப்படி அறிந்து கொள்ள முடியும். உறவுகளை எப்படி பிள்ளைகள் அறிவார்கள். இன்றைய தலைமுறையினருக்கு உறவு முறைகளே தெரிவதில்லை. இப்போது நவீனம், மாற்றம் என்ற பெயரில் மொத்த உறவுகளையும் தொலைத்து வருகிறோம் என்பதே வேதனையான உண்மை.












Click it and Unblock the Notifications