தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
Recommended Video
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

எங்கு அதிகமாகும்
மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்கள் போக வேண்டாம்
வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதியில்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 4 ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தென்மேற்கு அரபிக்கடல் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்கள் செல்ல வேண்டாம்
வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர வரை வீசக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்" என்றார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் கெட்டி, கொடநாட்டில் தலா 2 செமீ மழையும், கன்னியாகுமரியின் சில இடங்களிலும், கிருஷ்ணகிரியில் தலா 2 செமீ மழை பெய்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு செமீ மழை பெய்திருந்தது.

எப்போது மழை
தென்மேற்கு பருவ மழை இன்னும் ஒரு வாரத்திற்குள் கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய நிலை இருப்பதால் ஜுன் தொடங்கும் போதே மழை தொடங்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை ஜுன் மாதத்தில் வழக்கமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழையால் இந்த முறை நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications