ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பேசுங்க.. எம்பிக்களுக்கு ஸ்டாலின் சொன்ன முக்கிய மெசேஜ்.. ஏன்?
சென்னை: நாளை நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. இந்த நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்கணும். இந்தித் திணிப்பைத்தான் நாம எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த மக்களையோ இல்லை, என்று முதல்வர் எம்பிக்களிடம் பேசி உள்ளாராம்.
குறிப்பாக, நிதிப்பகிர்வு, தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை திமுக அரசு எதிர்கொள்கிறது. இந்த விவகாரங்களுக்காக பிறமாநிலங்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்ல எம்.பி.க்களுடன் விவாதிக்கப்பட்டு சில முடிவுகளை எடுத்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இந்த விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் என்னமாதிரி நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து எம்.பி.க்களின் யோசனைகளை கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பேசியது என்ன?
நாம் நடத்திய ஒரே ஒரு அனைத்துக்கட்சிக் கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது.
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படவுள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும், முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் நம் சார்பில் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம்தான். நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றியடையும் வரை இந்த போராட்டமும் முன்னெடுப்பும் தொடர வேண்டும்.
தொகுதி மறுவரையறை, நிதிப்பகிர்வு, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தி மொழித் திணிப்புனு தொடர்ச்சியாக நம்மள பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. இவற்றில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும்.
தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக டெல்லியில் தமிழ்நாட்டு எம்பிக்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துகளையும் கேட்டு செயலாற்றிட வேண்டும்.
மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோட வைக்கணும். இந்தித் திணிப்பைத்தான் நாம எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த மக்களையோ இல்லை. அதனால், இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
"எங்கள் மாநிலத்தில் இருமொழிக் கொள்கை மூலமாக அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள் - உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று பெரிய பொறுப்புகளில் இருப்பதை கவனியுங்கள் "- என அவர்களும் நம் தரப்பு நியாயத்த புரிஞ்சிக்குற மாதிரி பேசுங்க. "இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா?" என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் போது அனைத்து திமுக எம்பிக்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும்.
மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காவும் தி.மு.க. எம்பிக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.என்று பேசியுள்ளார் என்று திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications