தோல்விக்கு காரணமாக நிர்வாகிகள் சொன்ன பதில்.. கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென ரிப்ளை கொடுத்த எடப்பாடி!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. அதிமுக, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நாதகவுக்கு பின்னால் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் பேசியது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தேர்தல் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன, எந்த இடத்தில் மக்களின் ஆதரவை பெற தவறினோம் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கேட்டு றிந்ததாகவும், சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் பற்றியும் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, வேறு வலுவான கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications