தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையா? எடப்பாடி ரூட் கிளியர்! ஆஹா பக்கா ஸ்கெட்ச்!
சென்னை: தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதற்குப் பின்னால் என்ன அரசியல் கணக்கு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாகக் கூறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் போதும், 'தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் பிறகு கூட்டணி தர்மத்திற்காக உடன்பாடு இல்லாத விசயங்களைச் செய்ய வேண்டி உள்ளது.

ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எது தேவையோ அதை மட்டுமே மனதில் வைத்துச் செயல்படுவோம்' என்று மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார்.
உங்கள் கூட்டணிக்கு 'பிரதமர் வேட்பாளர் யார்' எனக் கேள்வி எழுப்பியதற்கு, 'மேற்கு வங்கத்தில் முதல்வர் வேட்பாளர் யார் எனச் சொல்லியா வாக்கு கேட்டார்கள். ஒடிசாவில் பிரதமர் யார் என சொல்லியா வாக்கு கேட்டார்கள். அவ்வளவு ஏன் லேடியா மோடியா என்று சொல்லித்தானே அம்மாவே வாக்கு கேட்டார்கள். அதைப்போல் கேட்போம்' என்று கூறி இருக்கிறார்.

சொல்லப் போனால் ஒருவகையில் அதிமுகவே தேசிய கட்சிதான். அதை அதிமுகவினரே பல காலமாக மறந்துவிட்டனர்.
அதிமுகவின் முதல் முதலமைச்சர் புதுச்சேரியில்தான் உருவானார். அவர் பெயர் சுப்ரமணியன் ராமசாமி. இவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். அதிமுக 1974 பிறகு 1977 வரை புதுவையில் ஆட்சியிலிருந்தது. கர்நாடகாவில் ஒரு காலத்தில் 2 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு இருந்தனர்.

1976இல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில்தான் எம்.ஜி.ஆர். தேசிய கட்சியாக அதிமுகவை மாற்றினார். ஒருவகையில் அதிமுகவே தேசிய கட்சிதான்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியது முதல் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தே மக்களவைத் தேர்தலைச் சந்தித்திருக்கிறார். அவர் மொராஜி தேசாய் தொடங்கி இந்திராகாந்தி வரை மத்தியில் கூட்டணியிலிருந்தார். அதன்பிறகு ஜெயலலிதாகூட ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, வாஜ்பாய் எனப் பலருடன் கூட்டணி வைத்தே மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார்.
பின்னர் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்குச் சோனியா காந்தியுடன் முரண்பாடு வந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து வாஜ்பாயை பிரதமராக்கினார். அந்த ஆட்சியைக் கவிழ்க்க இவரே பின்னர் காரணமாக இருந்தார்.

இப்படி தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சலித்துப்போன ஜெயலலிதா, ஒரு கட்டத்திற்கு மேல் தேசிய கட்சிகளின் உதவி இல்லாமலே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆகவேதான் 2014இல் இன்றைக்கு உள்ள அளவுக்கு மோடி எதிர்ப்பு தமிழ்நாட்டில் அப்போது இல்லை. முதல்முறையாக அவர் பிரதமர் வேட்பாளருக்கு நிறுத்தப்பட்டார். அப்போது நண்பர் என்ற நிலையிலிருந்த மோடியை மிகத் தைரியமாக எதிர்த்து 'மோடியா இந்த லேடியா?' என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
மோடி இத்தனைக்கும் ஜெயலலிதாவின் அரசியல் நண்பர். மோடியின் நெருங்கிய நண்பராகப் பத்திரிகையாளர் சோ இருந்தார். அதே சோ தான் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் மோடியுடன் ஜெயலலிதாவைக் கூட்டணி வைக்க உதவி இருக்கலாம். ஆனால், அதற்கு ஜெயலலிதா இடங்கொடுக்கவே இல்லை.

இன்றைக்குக் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமி அதே முடிவுக்கு வந்துவிட்டார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் அது பகை சொல். அதுவே தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் அது பகை வார்த்தை அல்ல. இருவரையும் சம அளவில் வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது.
அதை மனதில் வைத்தே அவர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார். இது சாதகமான முடிவுதான். நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, பாஜக ஆட்சிக்கு வந்தாலும் சரி இருவரிடமும் பகை இல்லாமல் பழகலாம்.
இதே பாணியைத்தான் ஒடிசாவில் நவீன் பட்நாயக் கடைப்பிடித்து வருகிறார். அதைத்தான் இன்று எடப்பாடி பழனிசாமி பிரஸ் மீட்டில் விளக்கியும் இருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமி கணக்குத் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் இரண்டு கட்சிகளுக்குள்தான் மோதல் இருக்க வேண்டும். ஒன்று, திமுக. மற்றொன்று அதிமுக. அதை திமுகவும் ஏற்கிறது. அதை மனதில் வைத்துத்தான் 'எங்களோடு சேர்ந்து மோடியை எதிர்க்க வாருங்கள்' என்று திமுக தலைவர் எடப்பாடியை அழைக்கிறார்.
அதில் அதிமுகவும் திமுகவும் ஒத்த அலைவரிசையில் உள்ளனர். அண்ணாமலை தான் காற்று வீசுவதற்கு ஏற்ப அரசியல் செய்கிறார். ஒருமுறை 'தனியாக வந்தால் தான் மக்கள் நம்புகிறார்கள். வாய்ப்பளிப்பார்கள்' என்கிறார். பிறகு 'கதவு மட்டும் அல்ல, ஜன்னல்களும் திறந்தே உள்ளன' என்கிறார்.

இப்போதைக்கு அந்தக் குழப்பம் அதிமுகவில் இல்லை.













Click it and Unblock the Notifications