கரை தட்டி கிடக்கும் மக்கள் நீதி மய்யம்.. மீட்கப்படுவது எப்போது?.. கமலின் அடுத்த திட்டம்தான் என்ன?
சென்னை: 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள். ''அரசியலுக்கு இப்போ வருகிறேன். அப்போ வருகிறேன்'' என்று நடிகர் ரஜினி விளையாட்டு காட்டி கொண்டிருந்த வேளையில், ''நான் களமிறங்கி காட்டுகிறேன்'' என்று துணிச்சலுடன் மக்கள் நீதி மய்யத்துடன் மதுரையில் அரசியல் களம் கண்டார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video
''வலதுமில்லை இடதுமில்லை. மய்யமே பிரதானம்'' என்று கமல்ஹாசன் வித்தியாசமாக கூறியபோது இளைஞர்கள் உள்பட பலரும் அவரை நம்பினார்கள். இந்த நம்பிக்கை கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் அதாவது 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே எதிரொலித்தது.
3.71 சதவீதம் வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க, தி.மு.க.வையே திரும்பி பார்க்க வைத்தார் நம்மவர். இப்படி அரசியலில் கடலில் மய்யமாக சென்று கொண்டிருக்க வேண்டிய மக்கள் நீதி மய்யம் என்னும் கப்பல், இப்போது கரை தட்டி மீட்க கூட ஆளில்லாமல் காட்சி அளிப்பதுதான் பரிதாபத்தின் உச்சம்.

படுதோல்வி
கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 3.71 சதவீதம் வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம், 2021 சட்டசபை தேர்தலில் பெற்றது வெறும் 2.45 சதவீத வாக்குகள் மட்டுமே. கரை ஒதுங்கிய கப்பலில் யார் பயணிக்க முடியும்? ரிசல்ட் வந்ததுதான் தாமதம். மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்து விட்டனர்.

பெருந்தலைகள் அனைத்தும் காலி
கமல்ஹாசனின் வலதுகரமாகவும், கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் விளங்கிய டாக்டர் மகேந்திரன் சுபம் போட்டு கட்சியில் இருந்து வெளிநடப்பு செய்ய, நூல் பிடித்தாற்போல் கிட்டத்தட்ட கமல்ஹாசன் தவிர கட்சியின் பெருந்தலைகள் அனைத்தும் கூடாரத்தை காலி செய்து விட்டன. டார்ச் லைட் வெளிச்சத்தில் தமிழ்நாட்டை இருளில் இருந்து மீட்போம் என்று கூறியவர்கள் இப்போது உதயசூரியன் வெளிச்சத்தில் தஞ்சமடைந்து விட்டனர்.

இதுதான் பிரச்சினை
ஒரு கட்சி அரசியலில் தோற்றுவிட்டால் அதுவும் புதிதாக தொடங்கிய கட்சி அரசியலில் சறுக்கி விட்டால், அதில் இருப்பவர்கள் வேறு கட்சிக்கு தாவாவிட்டால்தான் அரசியலில் அதிசமயான ஒன்று. இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் மணி அடித்தவுடன் பள்ளியை விட்டு ஓடும் குழந்தைகளைபோல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அனைவரும் ஒருசேர சென்று கொண்டிருக்கும்போதும் கமல்ஹாசன் ஏதோ விளையாட்டுதனமாக இருப்பதுதான் ஆகப்பெரும் பிரச்சினை.

குற்றச்சாட்டு
கட்சியில் இருந்து ஏன் வெளியேறுகிறார்கள்? இவர்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து கமல் இதுவரை சீரியஸாக யோசிக்கவில்லை என்றே கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். முக்கிய நிர்வாகிகள் விலகி விட்டனர். அடுத்து என்ன செய்யலாம்? இக்கட்டான நிலைமையில் கட்சியை வலுப்படுத்துவது எப்படி? உள்ளாட்சி தேர்தல் வருகிறது. அதற்கு எப்படி ஆயத்தமாவது? என்பதை பற்றி யோசிக்காமல் வழக்கம்போல் டுவிட்டரில்அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார் நம்மவர் என்பதே அரசியல் வல்லுநர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

தொண்டர்களின் எண்ணம்
டுவிட்டரில் இலக்கண வார்த்தைகளை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிப்பது, அறிக்கையாக விட்டு தள்ளுவது என்றில்லாமல் நேரடியாக களமிறங்கி இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனம் விட்டு பேசி கரை தட்டி கிடக்கும் கட்சியை மீண்டும் பழையபடி ஓட வைக்கும் என்பதே கமல்ஹாசனை நம்பி இருக்கும் கடைமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போதே இதற்குரிய வேலைகளை செய்தால்தான் உள்ளாட்சி தேர்தலில் மய்யம் கொஞ்சமாவது எழுந்து நிற்க முடியும். ஆனால் இவையெல்லாம் கமல்ஹாசனின் நேரடி செயல்பாட்டில்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications