ஸ்டாலின் ஆக்சன்! தூக்கப்பட்ட 5 பாஜக புள்ளிகள்! டெல்லியிலிருந்து பறந்து வந்த தேசிய "தலை".. ஒரே பிரஷர்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் டாப் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா திடீரென தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடந்த மாதம் இறுதியில் தமிழ்நாடு வருவதாக இருந்தது. கோவையில் நடக்கும் கூட்டத்திற்கு அவர் வருவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் கேரளாவிற்கு வந்த அமித் ஷா, தமிழ்நாடு பக்கம் ஏனோ எட்டிப்பார்க்கவில்லை.
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது அமித் ஷா அதிருப்தியில் இருப்பதாக அப்போதே தகவல்கள் வந்தன.
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது ஏன்? எப்படி நடந்தது? அரபிக் கடலில் வீணாக கலக்கும் 6 டிஎம்சி நீர்
என்ன நடக்கிறது?
இந்த நிலையில்தான் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா திடீரென தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சரியாக தமிழ்நாட்டில் பாஜகவின் டாப் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில்தான் அவர் தமிழ்நாடு வந்துள்ளார். இன்றுதான் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக போலி அட்டைப்படத்தை உருவாக்கி, அதை பாஜகவினர் போஸ்டராக ஒட்டியதாக கைது செய்யப்பட்டார்.
அடுத்தடுத்த கைது
அதேபோல் ஆ. ராசாவை கண்டிக்கும் விதமாக வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா கைது செய்யப்பட்டார். இவர் போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடியில் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு போஸ்டர் ஒட்டிய போது, அதை தடுக்க முயன்ற போலீசாரை பாஜக நகர தலைவர் சீனிவாசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரும் கைது செய்யப்பட்டார்.
அடுத்த கைது
ஆ. ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் போலீசை தாக்கிய வழக்கில் கோவில்பட்டி நகர பாஜக தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி பாஜகவினர் அடுத்தடுத்து கைதாகி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்சனுக்கு இடையே ஜெ.பி நட்டா தமிழ்நாடு வந்துள்ளார். 2 நாள் பயணமாக மதுரை வந்துள்ள அவர் தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் குறித்தும், பாஜகவினர் கைது குறித்தும் அண்ணாமலையிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வேறு காரணம்
2024 லோக்சபா தேர்தல் பற்றியும் நட்டா இந்த கூட்டத்தில் பேச உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கடந்த பயணத்தின் போதே கட்டளை போட்டு இருந்தார். ஆனால் இன்னும் பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க முடியவில்லை. பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது. பாஜகவிற்கு பல பூத்களில் ஆட்களே இல்லை. இதனால் டெல்லி தலைமை அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பற்றி இன்று பாஜக நிர்வாகிகளிடம் நட்டா ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.