தங்கம் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு என்ன காரணம்? இனிமேல் தான் நடக்க போகுது பெரிய சம்பவம்
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 5ம் தேதியான நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆகியது. தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர வீட்டில் தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள்.. பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம்.. தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது..

தங்கம் விலை ஆதிகாலத்தில் எப்படி இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அதாவது 2006ம் ஆண்டு வாக்கில் நகைக்கடைக்கு போயிருந்தேன்.. அப்போது தங்கம் விலை ஒரு பவுன் 6000 ரூபாய் என்கிற அளவில் இருந்து. இரண்டு பவுன் நகையை வெறும் 12000க்கு எடுத்தேன்.. அதேபோல் 2012ல் 10000க்கும். 2019ம் ஆண்டு 22000 ரூபாய்க்கும், அடுத்த 4 வருடங்களில் தங்கம் விலை தாறுமாறாக ஏறி இப்போது 48 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இதில் ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் ஆகியவற்றை சேர்த்தால் 50000 ரூபாய் என்கிற அளவிற்கு ஒரு பவுன் நகை வரும். வெறும் 5 ஆண்டுகளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.23 ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது.
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடனேயே காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 930-க்கும், ஒரு பவுன் ரூ.47 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆகியது. நேற்று மாலையில், கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 15-க்கும், ஒரு பவுன் ரூ.48120-க்கும் விற்பனை ஆனது. கடந்த 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் அதிகரித்து இருக்கிறது.
இந்த தொடர் விலை உயர்வு கரணமாக தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஒரு கிராம் ரூ.5975-க்கும், ஒரு பவுன் ரூ.47800-க்கும் விற்பனையாகியது. அதன்பிறகு அதிகபட்சமாக தற்போது 48120 ஆக விற்பனையாகிறது..
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க முக்கிய காரணம் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது தான் என்கிறார்கள்.
அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி சாதகமான சூழல் இல்லை. , உற்பத்தி திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவையும் நல்ல சாதகமான நிலையில் இல்லை.. இப்படி நீடித்துக் கொண்டிருந்தால், பொருளாதாரம் சார்ந்த பங்கு சந்தைகள் சரியும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக பல முதலீட்டாளர்கள் அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தங்கம் விலை உயருவதாகவும், இன்னும் 2 வாரத்துக்கு தங்கம் விலை ஏற்றத்துடன்தான் காணப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications