அடுத்த மெட்ரோ ரூட்! லைட் ஹவுஸ் டூ பூந்தமல்லி எப்போது திறக்கப்படும்? பரபர தகவல்! ஆனா சின்னதா ட்விஸ்ட்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் இப்போது படுவேகமாக நடந்து வரும் நிலையில், இதில் முக்கியமான லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி ரூட் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமானத்தில் முக்கியமான வழித்தடமான லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வழித்தடம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

இப்போது 116 கிமீ நீளத்திற்கு மெட்ரோ 2ஆம் கட்டுமானம் நகர் முழுக்க நடந்து வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் பூங்கா, பூந்தமல்லி டூ லைட் ஹவுஸ், மாதவரம் பால் பண்ணை டூ சோழிங்கநல்லூர் என்று 3 வழித்தடங்களில் ரூ. 61,843 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
மெட்ரோ நிர்வாகம்: இதில் பூந்தமல்லி டூ லைட் ஹவுஸ் கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், அந்த வழித்தடம் படிப்படியாகத் திறக்கப்படும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான பாதை 2025ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 2027ம் ஆண்டு இறுதிக்குள், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான பாதை பொதுமக்களுக்குத் திறக்கப்படும். நகரின் மேற்குப் பகுதியில் இருந்து, அதாவது பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
கட்டுமான பணிகள்: இரண்டாம்கட்ட மெட்ரோவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் முதல் ரூட்டாக இது இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த ரூட்டில் முக்கியமான ஜங்ஷனாக கருதப்படும் திருமயிலையில் முதலில் மெட்ரோ ரயில் நிற்காது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சிக்கலான திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அதிக நேரம் எடுப்பதால் தொடக்கத்தில் இங்கே ரயில்கள் நிறுத்தப்படாது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டாம் கட்ட திட்டத்தில் இந்த ஹைட் ஹவுஸ் பூந்தமல்லி வழித்தடத்திற்குத் தான் முக்கியதுவம் கொடுத்து கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. ஏனென்றால் இந்த ரூட் பூந்தமல்லியில் தொடங்கி காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பவர் ஹவுஸ், கோடம்பாக்கம், பனகல் பார்க், நந்தனம், போட் கிளப், நந்தனம், போட் கிளப் திருமயிலை, லைட் ஹவுஸ் வரை என முக்கிய பகுதிகள் வழியாகச் செல்கிறது.
எப்போது திறக்கப்படும்: முதலாம் கட்ட மெட்ரோவை போலவே இதையும் படிப்படியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதலில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்.. இது 2025ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரூரில் இருந்து பவர் ஹவுஸ் வரையிலான பாதை 2026இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பாதை உட்பட முழு ரூட் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த ரூட்டில் திருமயிலை பகுதியில் நிலத்திற்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. இந்த திருமயிலை 3ஆவது மற்றும் 4வது வழித்தடங்களை இணைக்கும் ஒரு சந்திப்பாக அமைகிறது.. தொடக்கத்தில் கட்டுமானப் பணிகள் டெண்டர்கள் தொடர்பான சிக்கல்களால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இப்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்ட நிலையில், ரயில் நிலைய பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சின்னதா ஒரு ட்விஸ்ட்: இருப்பினும், இரண்டு ரூட்களை இணைக்கும் ஜங்ஷன் என்பதால் இந்த மெட்ரோ ஸ்டேஷனை பிரமாண்டமாகக் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதில் மொத்தம் ஐந்து நுழைவாயில்கள் இருக்கும் என்பதால் கட்டுமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, இந்த ஸ்டேஷன் கட்டுமானம் மட்டும் 2028இல் தான் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, என்ன தான் இந்த ரூட்டில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டாலும் திருமயிலையில் மெட்ரோ ரயில்கள் நிற்க நாம் 2028 வரை காத்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ஒரு [திருமயிலை] ஸ்டேஷன் முடிவடையும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, ஆரம்பக் கட்டங்களில் இந்த மெட்ரோ நிலையத்தில் ரயில்களை நிறுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். எனவே, இந்த ரூட்டில் திருமயிலை வழியாக மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படாமல் இயக்கப்படும்.
ஓராண்டுக்குப் பின், கட்டுமான பணிகள் முடிந்ததும், பூந்தமல்லியில் இருந்து வரும் ரயில்கள், திருமயிலையில் நின்று செல்லும்,'' என்றார். சமீபத்தில் தான் லைட் ஹவுஸ் மற்றும் பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications