ஜல்லிக்கட்டு வர்ணனையில் கலக்கிய செங்குட்டுவன்! தமிழ் கிரிக்கெட் கமெண்ட்டர்ஸ்.. பார்த்து கத்துக்கோங்க
சென்னை: கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிகளில் வர்ணனை பெரிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று வெகுசிறப்பாக நடந்தது. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசாக கார் வென்றார் கார்த்திக். கடந்த வருடமும் இவருக்குத்தான் பரிசு கொடுக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த களையின் உரிமையாளருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இன்றும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த களையின் உரிமையாளருக்கும் கார் பரிசாக வழங்கப்படும். இன்னொரு பக்கம் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த போட்டிக்காக 1,000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வாகியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு இந்த போட்டிக்காக பரிசுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன., உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கி தற்போது முடிந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிகளில் வர்ணனை பெரிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது.
வர்ணனை: நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் செங்குட்டுவன் என்பவர் வர்ணனை செய்தார். இதில் அவரின் வார்த்தை பிரயோகங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. எந்த sterotypeம் இல்லாமல்.. முழுக்க முழுக்க புதிய டிரெண்டில் அவர் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. எப்போதும் ஜல்லிக்கட்டுகளில் பேசப்படும் கொஞ்சம் போரிங்கான கமெண்ட்ரியை விடுத்து புதிதாக டிரெண்டிங் வார்த்தைகளை போட்டு அவர் பேசினார்.
அதேபோல் ஆட்டத்தின் நுணுக்கங்களை துல்லியமாக குறிப்பிட்டு.. அந்த தீவிரத்தை வீடியோ பார்க்காமல் ஆடியோ மட்டும் கேட்பவர்களே உணரும் விதமாக சிறப்பாக பேசி இருந்தார். கிரிக்கெட்டில் 2011 உலகக் கோப்பையில் தோனி சிக்ஸ் அடித்து கோப்பையை வென்ற போது.. ரவி சாஸ்திரி சொன்ன கமெண்ட்ரியை யாராலும் மறக்க முடியாது.
சிறப்பான கமெண்ட்ரி: கமெண்ட்ரிக்கு என்று அப்படி ஒரு வலிமை இருக்கிறது. அதைதான் நேற்றும் அவனியாபுரத்தில் செங்குட்டுவன் செய்து காட்டினார். இவரின் தெளிவான பேச்சு, ஆட்டத்தை கண் முன் நிறுத்தும் வர்ணனை, வார்த்தை பிரயோகம் சிறப்பாக இருந்தது.
தமிழ் ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்கிறேன் என்ற பெயரில் இங்கே சிலர் அவனே, இவனே என்பது தொடங்கி ஆங்காங்கே ஜாதி வன்மைத்தையும் தூவும் நிலையில்.. ஆர்ஜெ, விஜே என்று பெரிய பயிற்சி இல்லாமல்.. செங்குட்டுவன் பல மடங்கு சிறப்பாக கமெண்ட்ரி செய்துள்ளார். கிரிக்கெட் கமெண்ட்டர்களும் இவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டுலயே அதிக ஜல்லிக்கட்டு போட்டில பேசினது நான்தான்.. என் உயிர் இருக்க வரைக்கும் ஜல்லிக்கட்டுல இருப்பேன்.நான் தொடர்ந்து வர்ணனை செய்வேன் என்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு வர்ணனை செய்த செங்குட்டுவன் ஊடகங்களுக்கு நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார். நேற்று குஜராத் மாடு என்று பாகுபலி மாடு ஒன்றை கிண்டல் செய்தது.. உள்ளே வந்தவர்களை வெளியே போக காமெடியாக பேசியது என்று கடைசி வரை இவரின் வர்ணனை வேகமும், சுவாரசியமும் குறையாமல் இருந்தது.












Click it and Unblock the Notifications