"கிளைமேக்ஸ்".. அதிமுக வழக்கில் இதுதான் தீர்ப்போ.. மறைமுகமாக உணர்த்திய நீதிமன்றம்.. ஓ இதுதானா!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கி உள்ளது. நேற்று ஓ பன்னீர்செல்வமின் ஆதரவாளர் வைரமுத்து தரப்பு வாதம் வைத்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைக்க உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்து வருகிறது. நேற்று வழக்கில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

வைரமுத்து
இந்த வழக்கில் இன்றோடு விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நீதிபதிகளுக்கு வேறு வழக்குகள் இருக்கின்றன. அதனால் இன்றோடு விசாரணை நிறைவுபெறும். அடுத்த வாரத்தில் ஆனால் தீர்ப்பு வராது. தீர்ப்பு வர சில காலங்கள் ஆகலாம். இந்த நிலையில்தான் நேற்று நடந்த விசாரணையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், கட்சியின் அடிப்படை விதியையே எடப்பாடி மாற்றிவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத வகையில் எடப்பாடி விதிகளை மாற்றி உள்ளார். கட்சியின் பை லாவில் எடப்பாடி கை வைத்துள்ளார். 10 வருடங்களுக்கு கட்சியில் இருந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று எடப்பாடி கொண்டு வந்துள்ளார். தான் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி இப்படி விதிகளை மாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைந்த பின்பே பொதுச்செயலாளரை தேர்வு செய்து இருக்க வேண்டும்.,

நீக்கம்
அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும். இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

ஜெயலலிதா
ஜெயலலிதா மறைவிற்குப் பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் பிரச்சனையே இருந்து இருக்காது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி தேவைப்பட்டிருக்காது. ஆனால் அப்போது செய்யாத எடப்பாடி இப்போது தனக்கு தோதான நேரத்தில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளார். அந்த பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டு வர தீர்மானத்தித்தோம். அதற்காக பொதுக்குழுவில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடப்பது போல தேர்தல் நடக்கும் என்று முடிவு எடுத்தோம். அந்த உட்கட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. தற்போதும் தேர்தல் ஆணைய ஆவணங்களில் அந்த விவரங்கள்தான் உள்ளன. ஆனால் அந்த பதவியை சட்டத்தை மீறி பொதுக்குழுவை கூட்டி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி உள்ளனர்., என்று வாதம் வைத்தார்.

என்ன தீர்ப்பு
இந்த வழக்கில் என்ன மாதிரியான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் சில கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். நீதிபதிகள் கேட்கும் கேள்விகளை வைத்து சட்ட வல்லுநர்கள் சில விதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இந்த அப்பீல் சரி, தவறு என்று நீதி மன்றம் சொல்லும். ஆனால் வழக்கில் இறுதியான ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை. அதாவது பொதுக்குழு சரி, தவறு என்று உத்தரவிட வாய்ப்பு குறைவு. இது சிவில் வழக்கு. அதனால் சிவில் கோர்ட்டில் இருக்கும் வழக்கில் முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பு வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளருக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை. அதாவது அவரின் பதவிக்கு இடைக்கால தடை கிடைக்க வாய்ப்பு இல்லை.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒரு சில பாயிண்ட்கள் தீர்ப்பில் இருக்கலாம். அதாவது அதிமுகவின் அடிப்படை கட்சி விதிகளை மாற்றியதை கண்டிக்கலாம். தேர்தல் விதிகளை மாற்றியதை கண்டிக்கலாம். ஆனால், இதை மாற்ற வேண்டும். மீண்டும் ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் தீர்ப்புகள் வர வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் சிவில் கோர்ட்டில் இந்த வழக்கை பார்த்துக்கொள்ளுங்கள். தேர்தல் ஆணையம் இதில் இறுதி முடிவு எடுக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக நம்மிடம் பேசிய சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications