1000 கோடியில் அடையாளமே மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம்.. அசர வைக்கும் புதிய படங்களை பாருங்க
சென்னை: சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது ரயில்கள் வந்து செல்லும் முனையங்களாக உள்ளது.இதில் தாம்பரம் ரயில் நிலையம் 1000 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. பணிகளுக்கு பின்னர் தாம்பரம் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பது குறித்து புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சென்னை தற்போது தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் வளர்ந்துள்ளது. கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் சென்னை வளர்ந்துவிட்டது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 6 கிமீ தூரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு இடையேயான வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது. இந்த சூழலில் எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.

இது தவிர ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை.

எனவே தான் மத்திய அரசு 1000 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையத்தை வேறலெவலில் மாற்ற முடிவு செய்துள்ளது. ரயில் நிலையங்கள் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சேர்கள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருப்பக்கமும் உள்ள முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், பிளாட்பார்ம்கள் என எல்லாமே வேறவெலலில் மாறப்போகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலைய கட்டிடங்கள் முழுமையாக ஐடி நிறுவனங்களை போல் பார்க்க மிக அழகாக மாற்றப்பட உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையமா இது என்று கேட்கும் அளவிற்கு மாறும் என்று தெரிகிறது. இது தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கிரியேட்டிவ் குரூப் சார்பாக வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தை சென்னை அப்டேட்ஸ் என்ற பக்கத்தில் நெட்டிசன் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications