முடியப்போகும் ஆயுள்! நிலவில் விக்ரம் லேண்டர், ரோவரின் இறுதி நொடிகள் எப்படி இருக்கும்? பரபர தகவல்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் இவை இரண்டின் இறுதி நொடிகள் எப்படி இருக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை 14ம் தேதி சந்திரயான் -3 திட்டம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டர் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவரும் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இதன்மூலம் பூமியின் துணைக்கோளான நிலாவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக கால்பதித்த 4வது நாடு என்ற பெயரையும், நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் உள்ள ஆய்வுக்கருவிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாற்றம் மற்றும் அதிர்வுகள் பற்றி ஆய்வு செய்து முக்கிய தகவல்கள் அனுப்பியது. அதேபோல் பிரக்யான் ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி நிலவின் தென்துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது. மேலும் அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.
ஆக்சிஜன் என்பது நாம் அனைவரும் சுவாசிக்கும் வாயுவாகும். இது நிலவின் தென்துருவத்தில் உள்ளது. இதையடுத்து தற்போது நிலவில் ஹைட்ரஜன் வாயு இருக்கிறதா? என்பதை ரோவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஹைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்பட்டால் உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம். மேலும் நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் நீர் என்பது 2 பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்சிஜன் நிறைந்தது தான். இதனால் ஹைட்ரஜன் தேடுதல் வேட்டையில் ரோவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தொலைவை கடந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிலவில் ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை தங்களின் ஆயுட்காலத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அதாவது தற்போது நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்து வரும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றின் ஆயுள்காலம் என்பது வெறும் 14 நாட்கள் மட்டும் தான்.
அதாவது லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றில் இருக்கும் சேலார் பேனல்கள் சூரியஒளியை பயன்படுத்தி ஆய்வுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்து கொள்ளும். அதன்படி பார்த்தால் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் 14 மட்டுமே சூரியஒளி கிடைக்கும். அதன்பிறகு அடுத்த 14 நாட்கள் சூரியஒளி கிடைக்காது. இப்படி இருக்கும்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்பட முடியாத நிலை ஏற்படும். கடந்த மாதம் 23ம் தேதி மாலையில் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர், ரோவர் உள்ளிட்டவை தரையிறங்கி இன்று வரை 11 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில் தான் 14 நாட்களுக்கு பிறகு நிலவில் மேற்பரப்பில் ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றின் நிலை என்னவாக இருக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சூரியஒளி கிடைக்காத பட்சத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவில் இயங்காது. இதையடுத்து ரோவர் மற்றும் ரோவர் உள்ளிட்டவை நிலவிலேயே தூங்க வைக்கப்படும். அதாவது நிலவில் செயலிழக்க செய்யப்பட்டு நிலவிலேயே வைக்கப்படும். இதற்கான பணிகளை தொடங்க விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications