4.4 மடங்கு பவர்புல்! உலகை உலுக்கும் ஓமிக்ரான் BF.7, BF. 12.. எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? இதை படிங்க!
சென்னை: சீனாவில் ஓமிக்ரானின் இரண்டு கிளை வைரஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. சீனாவில் இதனால் தினமும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகின்றன. இந்த ஓமிக்ரானின் கிளை வகைகள் எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு சக்தி கொண்டது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
பொதுவாக கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகையில் அதில் லேசான மாற்றங்கள் இருக்கும். அதாவது ஒரு வதந்தி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போது.. மாப்பிள்ளை சொம்பு கேட்டார் என்பது எப்படி மாப்பிள்ளை வெள்ளி சொம்பு கேட்டார் என்று மாறுமோ அது போலவே கொரோனா கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகையில் அதில் லேசான மாற்றங்கள் இருக்கும்.
அப்படித்தான் கொரோனாவில் பல உருமாற்றங்கள் ஏற்பட்டது. ஆல்பா, ஒமேகா, டெல்டா என்று பல்வேறு வகை கொரோனா உருவானது இப்படித்தான். அதே முறையில்தான் உலகம் முழுக்க ஓமிக்ரான் வகை கொரோனாவும் பரவியது.

ஓமிக்ரான்
இந்த ஓமிக்ரான் (B.1.1.529) கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. இதை உலக சுகாதார மையம் கடந்த வருடம் 26ம் தேதி கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று அறிவித்தது. ஏகப்பட்ட உருமாற்றங்கள் இருப்பது ஓமிக்ரான் கொரோனா வகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்த ஓமிக்ரான் கொரோனாவில் பல கிளை கொரோனா உருவாகி உள்ளன. அதாவது ஓமிக்ரான் மேலும் உருமாற்றம் அடைந்து பேரக்குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளது.

மாற்றம்
அந்த வகையில்தான் தற்போது ஓமிக்ரானின் கிளை வைரஸ் வகைகளான ஓமிக்ரான் BF.7, BF 12 ஆகிய வைரஸ்கள் உருவாகி உள்ளன. இதெல்லாம் இந்த வருட தொடக்கத்திலேயே உருவான வைரஸ்கள்தான். ஓமிக்ரான் வகை கொரோனாவில் 10க்கும் மேற்பட்ட கிளை வகைகள் உள்ளன. இதில் BF.7, BF 12 வகைகள் தான் தற்போது சீனாவில் அதிகம் பரவுகிறது. ஓமிக்ரான் பரவ பரவ, அவை லேசாக திரிபு அடைந்து இந்த கிளை வகைகள் உருவாகி உள்ளன. இதில் BF.7 வகை கொரோனா தொடக்கத்தில் சீனாவில் பரவிய ஆதி கொரோனாவான D614G வகையை விட 4.4 மடங்கு வலிமை வாய்ந்தது.

அர்த்தம் என்ன?
இதன் அர்த்தம் இந்த கொரோனா இன்னும் வேகமாக பரவும். சமயங்களில் ஏற்கனவே கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கும் இது தாக்கும். ஏனென்றால் கொரோனா வேக்சின் என்பது பழைய கொரோனாவை அடிப்படையாக வைத்து உருவாக்கியது. இது புதிய வகை கொரோனா என்பதால் நாம் போட்டிருக்கும் வேக்சின்கள் பலன் அளிக்காமல் போகலாம். இதனால் வேக்சினில் இனி வரும் நாட்களில் லேசான மாற்றங்களை செய்து மீண்டும் விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபத்து?
BF.7 மற்றும் BF.12 இரண்டிலும் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்பைக் புரோட்டின்களில் நிறைய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, வேக்சின் ஆற்றல், இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய கிளை ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவக்கூடியதா அல்லது அதிக ஆபத்தானதா என்று இன்னும் முழுமையாக நமக்கு தெரியாது.

டெஸ்டிங்
இதை தடுக்க சர்வதேச அளவில் வேக்சின் போடும் அளவை அதிகரிக்க வேண்டும். ஜீன் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். இப்போது இருக்கும் பிசிஆர் டெஸ்ட் மூலமே ஓமிக்ரான் கொரோனாவை கண்டறிய முடியும். 3 டார்க்கெட் ஜீன்கள் இதில் காணப்படவில்லை. இதை பிசிஆர் சோதனையில் கண்டறிய முடியும். இதன் மூலம் ஜீன் சோதனை செய்யாமலே ஓமிக்ரான் கொரோனாவை ஓரளவிற்கு கண்டறிய முடியும். ஆனால் ஓமிக்ரானில் BF.7 ஒன்னும் அவ்வளவு ஆபத்தானது இல்லை. அதை விட BQ.1 என்ற ஓமிக்ரானின் கிளை வைரஸ் அதிக ஆபத்து கொண்டது ஆகும். இது 10 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. இது இந்தியாவில் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கேஸ்கள்
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த நவம்பருக்கு முன்பே குணம் அடைந்துவிட்டனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 129 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் எத்தனை கேஸ்கள் ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா என்ற விவரம் வெளியாகவில்லை. இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3408 என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக 5,30,677 பேர் பலியாகி உள்ளனர்.

சீனா நிலவரம்
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. அங்கு இதுவரை மரணங்கள் பெரிதாக இல்லை. முக்கியமாக வயதானவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,242 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, சீனாவின் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக மரணம் அடையாளம் என்று கூறப்பட்டு உள்ளது. இல்லையென்றால் 15 லட்சம் பேர் வருட இறுதிக்குள் பலியாவார்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications