நடிகை கஸ்தூரி எங்கே இருக்கிறார்? நெருக்கமானவர்களை கண்காணிக்கும் போலீஸ்! கைவிலங்குடன் தேடும் தனிப்படை
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருடைய முன்ஜாமீன் மனுவையும் மதுரை கிளை அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கஸ்தூரி எங்கே இருக்கிறார் என போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பிராமண சமூகத்தினரை வந்தேறிகள் என பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை கண்டித்து கடந்த வாரம் சென்னை எழும்பூரில் பிராமணர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெலுங்கு பேசும் பிரிவை சேர்ந்த பல்வேறு கட்சி பிரதிநிதிகளும் கஸ்தூரிக்கு கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் தனது கருத்தை வாபஸ் பெறுமாறும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் கோரிக்கை எழுந்தது.
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு சமூகவலைதளங்களில் விளக்கம் அளித்த கஸ்தூரி, தான் தெலுங்கு பேசும் மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் ஒரு போதும் அவர்களை தவறாக பேசவில்லை என்றும் தான் தெலுங்கு பேசும் குடும்பத்தின் மருமகளான நிலையில் எப்படி தவறாக பேசுவேன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
கஸ்தூரி பேசிய வீடியோவை போட்டு காண்பித்து நீங்கள் இப்படித்தானே பேசினீர்கள் என கேட்ட போதும், அந்த வீடியோவை கூட பார்க்காமல் நான் அப்படி பேசவே இல்லை என சாதித்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கஸ்தூரி மீது புகார் எழுந்தது. இதனால் தனது போயஸ் தோட்ட இல்லத்தை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு எங்கே தலைமறைவாகிவிட்டார்.
இது அன்றைய தினம் போலீஸார் அவருக்கு சம்மன் கொடுக்கச் சென்ற போது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கிலிருந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். சமூக ஆர்வலர் என கூறும் கஸ்தூரி இப்படி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு ரத்தானது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரது இருப்பிடத்தை செல்போன் சிக்னலை வைத்தும் கண்டறிய முடியவில்லை.
கஸ்தூரி வேறு செல்போனில் இருந்து யாருடனாவது பேசி வருகிறாரா என தெரியிவல்லை. இதனால் கஸ்தூரிக்கு நெருக்கமானவர்களின் செல்போனுக்கு வரும் எண்களை போலீஸார் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications