திமுக புதிய பொதுச்செயலாளர் யார்...? மார்ச் 29-ம் தேதி திமுக பொதுக்குழு
சென்னை: திமுக பொதுக்குழு வரும் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் திமுக புதிய பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திமுக பொதுக்குழு தொடர்பான எதிர்பார்ப்பும், பரபரப்பும் இப்போதே அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
மார்ச் 29-ம் தேதி
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே திமுக பொதுக்குழு வரும் மார்ச் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்கப்படும் என ஸ்டாலின் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனியர்கள்
தற்போதைய நிலவரப்படி துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மட்டுமே திமுக பொதுச்செயலாளருக்கான போட்டியில் உள்ளனர். ஒருவேளை துரைமுருகன் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்பட்டால் பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, பொன்முடி, ஆகியோர் முட்டி மோதி வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவரை பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும் ஸ்டாலின் டிக் அடிக்க கூடும் எனத் தெரிகிறது.
எதிர்பார்ப்பு
திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்தவர் பேராசிரியர் அன்பழகன். இந்நிலையில் அவரது மறைவால் அந்த இடத்தை புதிதாக யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது. கருணாநிதியின் எண்ண ஓட்டங்களை அறிந்து பேராசிரியர் செயல்பட்டதை போல், ஸ்டாலினின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயல்படக் கூடிய நபர் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்பது திமுக தொண்டர்களின் மனவோட்டமாக உள்ளது.
ஒத்திவைப்பு
இதனிடையே திமுக பொதுச்செயலாளர் தேர்வு பற்றி விவாதிக்க வரும் வாரம் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் பொதுக்குழுவை கூட்டலாம் என நினைத்தாராம் ஸ்டாலின். ஆனால் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக பொதுவிடங்களில் கூடுவதையும், கூட்டம் சேர்ப்பதையும் தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருவதால் மார்ச் 29-ம் தேதியை தேர்வு செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.