செங்கோட்டையன் வீட்டில்.. லைன் லைனாக வரிசையில் திரளும் கார்கள்! குவிந்த ஆதரவாளர்கள்.. அப்போ எடப்பாடி?
சென்னை: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வீட்டில் ஆதரவாளர்கள் திரள தொடங்கி உள்ளனர். என் வீட்டில் தொண்டர்கள் கூடுவது வழக்கமானதுதான்; ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை என்று கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருந்தாலும் திடீரென பல ஆயிரம் பேர் லைன் லைனாக வரிசையில் வர தொடங்கி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டையன் வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்தே ஆட்கள் திரள தொடங்கினர். பொதுவாகவே அவர் வீட்டில் கூட்டம் இருக்கும். ஆனால் இன்று எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக கூட்டம் இருந்தது.
இதற்கு இடையில்தான் அதிமுக வழக்கில் தீர்ப்பு வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து செங்கோட்டையன் வீட்டில் ஆட்கள் அதிக அளவில் கூடினார்கள். பலர் காரில் வரிசையாக வர தொடங்கினர். காலை 10-11 மணி அளவில் 20க்கும் மேற்பட்ட கார்கள் அவர் வீட்டு வாசலில் நிற்க தொடங்கின. அவர் வீட்டில் ஆலோசனை நடப்பதாக இதையடுத்து செய்திகள் வந்தன. ஆனால் ஆலோசனை நடக்கவில்லை என்று செங்கோட்டையன் மறுத்தாலும் தொடர்ந்து அவர்களுடன் செங்கோட்டையன் பேசி வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

செங்கோட்டையன் எதிர்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
புறக்கணிப்பு
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த விழாவிற்கும் செங்கோட்டையன் செல்லவில்லை.
அதிமுக தொடர் தோல்வி
அதிமுக தொடர் தோல்வி, தேர்தல் புறக்கணிப்பு காரணமாக கட்சிக்குள் அவருக்கு எதிராக அலை ஏற்பட்டு உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயக்குமார் சமாதானம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை. இதை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. நாங்கள் எப்போதும் அவர்கள் புகைப்படத்தை புறக்கணித்தது இல்லை. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாபிறகு நேர்ந்த புறக்கணிப்பு இல்லை என்பதை உணர வேண்டும் என்று செங்கோட்டையன் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பு மூலமாக ஜெயக்குமார் பதிலளித்தார்.
திமுக அட்டாக்
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரான பின்பு 11 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் கட்சி இருக்கிறதா என்பதை முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளிலே தெரிகிறது. அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வரவே எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டு வருகிறார். தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கூட திமுக கொடியைத்தான் அதிமுக கட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, என்று அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் இதை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications