வீடியோ இருக்கு! காட்டட்டுமா? எதுவும் செல்லாது! உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வைத்த செக்! பரபரப்பு வாதம்
சென்னை: அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது தவறு, இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Recommended Video
ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமின் ஆதரவாளர் சண்முகம் தொடுத்த அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த பொதுக்குழுவில் அவைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டதும், 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதும் விதி மீறல் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டார். இதன் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

சண்முகம் வாதம்
இன்று ஓபிஎஸ் ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான மனுதாரர், சண்முகம் தரப்பு வைத்த வாதத்தில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்கள் பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டன. ஆனால் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானத்தை நிறைவேற்றியவர்களை தண்டிக்க வேண்டும், என்று வாதம் வைத்தார்.

எடப்பாடி பதில்
இதற்கு பதில் அளித்த எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் மேல்முறையீடே விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும். அப்படி இருக்கையில் இந்த கூடுதல் மனுக்களும் விசாரணைக்கு உகந்ததல்ல. அப்பீல் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும், என்றார். இதையடுத்து அவருக்கு பதில் அளித்த நீதிபதிகள், 11ம் தேதி பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்த மேல் முறையீட்டில் எழுப்ப முடியாது.

நியமனம் தவறு
அவைத்தலைவர் நியமனம் தவறு என்று மனுதாரர் சொல்கிறார். ஆனால் அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும், அன்று பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் 23ம் தேதி பொதுக்குழு வழக்கிற்கு மட்டுமே பொறுந்தும்... என்று நீதிபதிகள் கூறினார்கள். அதாவது 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற அனுமதி என்ற தீர்ப்பு, கடைசி பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும்.. ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் வாதம்
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் வைத்த வாதத்தில், ஓபிஎஸ் இபிஎஸ் மட்டுமே பொதுக்குழுவை கூட்டத்தை கூட்ட வேண்டும்.. கடந்த பொதுக்குழுவிலேயே நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியும். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது.

தற்காலிகம்
தற்காலிக அவைத்தலைவராக மட்டுமே தமிழ் மகன் உசேன் ஏற்கனவே,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டார். அவரை சிறப்பு தீர்மானத்தின் மூலம் நிரந்தர அவைத்தலைவராக நியமித்தது தவறு நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். உசேன் நியமனம் செல்லாது. அங்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய தயார், என்று ஓபிஎஸ் தரப்பு மனுவில் கூறியுள்ளது.

வீடியோ உள்ளது
இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண் வாதத்தில், தற்காலிக அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்தே நியமித்தோம் அவைத்தலைவரை நியமிக்க ஒ.பி.எஸ்.-சும் ஒத்துகொண்டார். பன்னீர் செல்வம் நலனுக்கு எதிராக கட்சி விதிகளில் திருத்தம் வரலாம் என்ற எண்ணத்திலேயே ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் : ஒ.பி.எஸ்.ஒத்துக்கொண்டார் என்பதற்கு ஆவண ஆதாரங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள்
ஓ.பி.எஸ். : நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு பொதுக்குழு வீடியோவே சாட்சி வீடியோவை தாக்கல் செய்யத்தயார், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்தது.












Click it and Unblock the Notifications