என்னாச்சு? ஏதோ சரியில்லை? சத்தமின்றி "ஸ்டாலின்" மூவ்! கண்டுக்காத எடப்பாடி.. சைலன்ட் ஓபிஎஸ்! குழப்பம்
சென்னை: அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு நேற்று முதல்நாள் வானகரத்தில் நடந்தது. இதற்கு இடையே ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் மோதல் ஏற்பட்டது . அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில், அங்கு எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அங்கு நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு
கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை. இன்று பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சதீஷ்குமார், இது எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார்.

மனுக்கள்
பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் திடீரென அதிமுக முன் இன்று போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக பொதுக்குழு அன்றுதான் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேல் மாடி கதவுகள், கீழே மெயின் கதவு, பின்னர் வெளியே கேட்டும் சீல் வைக்கப்பட்டது.

சாலை மூடல்
அதோடு அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக அலுவலகம் இருக்கும் 100 மீட்டர் பகுதி மட்டும் இந்த பக்கமும், அந்த பக்கமும் பேரிகேட் போட்டு அடைக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் உத்தரவின் பெயரில் அங்கு போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். 50 போலீசார் இருந்த இடத்தில் 175 போலீசார் தற்போது குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏன் இப்படி?
அதிமுக அலுவலகம் முன் சுழற்சி முறையில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். காலையில் 150, பிற்பகலில் 150 பின்னர் மாலைக்கு பின் 170 என்று 470க்கு மேல் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியை சுழற்சி முறையில் செய்து வருகிறார்கள். பொதுவாக ஒரு இடத்திற்கு இரண்டு பேர் உரிமை கொண்டாடும் போது அதில் சட்ட ரீதியான தீர்வு வரும் வரை சீல் வைப்பதே வழக்கம். அதன்படியே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

சீல் போலீஸ்
ஆனால் போலீஸ் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டதுதான் கேள்வியை எழுப்பி உள்ளது. அதிமுக தலைமையகம் என்பது கட்சியின் அடையாள சின்னம் போன்றது. ஆனால் அப்படிப்பட்ட தலைமையகம் மூடப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரிதாக எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. பொதுக்குழு அன்று மாலை எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சனம் செய்து பேசினார். பின்னர் ஜெயக்குமார் பேசினார். அதோடு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம்
மற்றபடி இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதிமுக அலுவகமே பூட்டப்பட்டுள்ள நிலையில், அதன் பொன் விழா ஆண்டில் எடப்பாடி பழனிசாமி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் இந்த விவகாரத்தில் பெரிதாக தலையிடவில்லை. அவர் சார்பாக வழக்கு மட்டுமே தொடுக்கப்பட்டது. மற்றபடி சீல் வைத்ததற்கு எதிராக பேட்டி கூட கொடுக்கவில்லை.

பாதுகாப்பு
ஆளும் திமுக அரசு மூலம் சத்தமின்றி இங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக அலுவலகத்திற்குள் பைல் எடுக்க கூட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்தான் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள். இவர்களின் அமைதிக்கு என்ன காரணம்.. திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது ஏன் என்ற குழப்பமும் , கேள்வியும் அதிமுகவினர் இடையே எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications