ராகுலை பிரதமர் வேட்பாளராக கொல்கத்தா கூட்டத்தில் முன்மொழியாதது ஏன்?.. ஸ்டாலின் விளக்கம் இதுதான்!
மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.
இந்த நிலையில் இதேபோல் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் கொல்கத்தாவில் பெரிய எதிர்க்கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. இது மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
செய்யவில்லை
ஆனால் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் , ராகுல் காந்தி குறித்து பேசவில்லை. ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. ஸ்டாலின் ஏன் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழியவில்லை என்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவறு இல்லை
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் நடந்த திமுக கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தது தவறு என்று யாரும் என்னிடம் கூறவில்லை. ஏன் இப்படி சொன்னீர்கள் என்று நேற்று யாராவது சொன்னார்களா? யாரும் நான் பேசியதை தவறாக நினைக்கவில்லை.
திமுக கூட்டம்
இங்கு நடந்தது திமுக கூட்டம். இது நாங்கள் நடத்திய கூட்டம். இதில் எது பேசவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கு நாங்கள் பேசியது என்னுடைய பார்வை மட்டுமல்ல. திமுகவின் பார்வை. மக்களின் பார்வை.
விளக்கம்
சென்னையில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமரை தேர்வு செய்யலாம் என மேற்கு வங்கத்தில் வேறுமாதிரி எண்ணுகிறார்கள். அதனால்தான் நான் மேற்கு வங்கத்தில் இது குறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.