இத ஏன் திமுக கூட்டணியிடம் கேட்கல? பத்திரிகையாளரிடம் சட்டென கேட்ட எல்.முருகன்!பிரஸ்மீட்டில் என்னாச்சு
சென்னை: சென்னையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். இந்த வேளையில் திடீரென எல் முருகன் இதுபோல் ஏன் திமுக கூட்டணி கட்சியிடம் நீங்கள் கேள்வி கேட்கவில்லை என பதில் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கி உள்ளன. மேலும் தங்களின் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் காய் நகர்த்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியை கட்சியினர் இப்போதே துவங்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி வருகிறார்.

அதிமுக-பாஜகவிலும் துவங்கிய பணிகள்
அதேபோல் உள்கட்சி விவகாரம் சார்ந்த பிரச்சனையால் அதிமுக முடங்கி போன நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை விரைவுப்படுத்த தொடங்கி உள்ளார். கட்சியின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பாஜகவும் மாநிலம் முழுவதும் பூத் மட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

அமித்ஷா-எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்றார். அதற்கு அடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என கூறினார். இந்நிலையில் தான் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

எல் முருகனிடம் கேள்வி
அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதன்பிறகு மத்திய இணையமைச்சர் எல் முருகன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛2019ல் தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்தது போல் தற்போது உறவு உள்ளதா?'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன், ‛‛இதில் பத்திகையாளர்களுக்கு தான் சந்தேகம் இருக்கிறது என நினைக்கிறேன்'' என்றார்.

பதில் கேள்வி கேட்ட அமைச்சர்
மேலும், ‛‛திமுக கூட்டணியில் கூட பல சலசலப்புகள் உள்ளன. திமுக உள்பட அந்த கூட்டணியில் இதுபற்றிய கேள்விகளை நீங்கள் கேட்டதாக தெரியவில்லையே?. ஆனால் எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மாநில தலைவர் மற்றும் நானும் இதுபற்றி பேசியுள்ளோம். அதிமுக தலைவரும் கூறியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என எங்கள் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டணி பிரச்சனை தொடர்பான கேள்வியை இனிமேல் திமுகவிடம் கேட்டால் நன்றாக இருக்கும்'' என கூறிவிட்டு சிரித்தார்.












Click it and Unblock the Notifications