பனையூரில் அண்ணாமலை வீட்டு முன் நடப்பட்ட பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது ஏன்? நடந்தது என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், பாஜகவின் கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றினர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பர்க்கலாம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அண்ணாமலையின் வீட்டிற்கு வெளியே 100 அடி உயரம் கொண்ட கட்சிக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையிடம் உரிய அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டும் இன்றி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கொடிக்கம்பத்தை அகற்ற கிரேன் மற்றும் ஜேசிபி எந்திரத்தை போலீசார் கொண்டு வந்தனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபடும் தகவல் கிடைத்ததும் அப்பகுதியில் உள்ள பாஜகவினர் அண்ணாமலை வீட்டின் முன்பு குவிந்தனர். கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் பாஜகவினர் என இரு தரப்பிலும் ஒன்றாக கூடிவிட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பாரத் மாதாகி ஜே என கோஷம்: இதையடுத்து தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கொடிக்கம்பத்தை அகற்றக் கூடாது என பாஜகவினர் சாலையில் அமர்ந்து தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, பாரத் மாதாகி ஜே என கோஷம் எழுப்பினர். இதற்கிடையே, அங்கு வந்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், இடையூறு இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை கூறுவதாகவும் அருகில் திமுக கொடிக்கம்பம் இருப்பது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்றும் பாஜகவை வளரவிடக்கூடாது என்று திட்டமிட்டு செய்யப்படுவதாகவும் சாடினார். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து நிகழ்விடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சம்பவ இடத்துக்கே உடனடியாக வந்தார்.
மண்டை உடைந்தது: போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூகமான உடன்பாடுகளும் ஏற்படவில்லை. பிறகு, போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களிடமும் பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினார்கள்.

கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து நொறுக்கினார்கள். இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.. இந்த கைகலப்பில் ஒருவரின் மண்டை உடைந்தது.. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினரை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீசார் அகற்றினர்.












Click it and Unblock the Notifications