சீட்டை விடுங்க.. எடப்பாடிக்கு வேற பிரச்சனை இருக்கே! ஸ்டாலின் கையில் 2 அஸ்திரம்! நாளை என்ன நடக்கும்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கவனம் பெற்றுள்ள நிலையில் நாளை அவையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் ஒரு பக்கம் நடக்க உள்ள நிலையில் அதிமுக இருக்கை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. எடப்பாடிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைத்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வத்தை வேறு இடத்தில் அமர வைக்க சொல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஓ பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணை தலைவர் கிடையாது. ஆர்பி உதயகுமார்தான் எதிர்கட்சித் துணை தலைவர். அதனால் அவரைத்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் அமர வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்போ அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.
இதனால் இருக்கையை மாற்ற கூடாது என்றும் அவரின் தரப்பு கோரிக்கைகளை வைத்து வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாகவும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முந்தைய ஆளும் அரசுக்கு கடுமையான தகவல்கள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையான விவரங்கள் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இதில் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த விவகாரத்தில் ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக கடுமையான புகார்கள் உள்ளன.

அதேபோல் அப்போது போலீஸ் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்தும் புகார்கள் உள்ளன. இந்த இரண்டு அறிக்கைகளும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் ஆவது உறுதி.
அது நாளையே தாக்கல் ஆகும் பட்சத்தில் இருக்கை விவகாரத்தோடு சேர்த்து இதுவும் அவையில் பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications