2 அமைச்சர்களுக்கு குறி.. 100 கோடி ஊழல் பற்றி வெளியிட போகிறேன்.. நாள் குறித்த அண்ணாமலை! பரபர பேட்டி!
சென்னை: ஜூன் முதல் வாரத்தில் இரண்டு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பற்றி செய்தி வெளியிடுவோம், 2 அமைச்சர்கள் பதவி விலகும் அளவிற்கு அவர்கள் செய்த ரூ.100 கோடியை தாண்டும் ஊழல்கள் பற்றி செய்தி வெளியிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரூ31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடிக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.
நீட், தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் மேடையில் எடுத்து வைத்தார். நேற்று ஸ்டாலினின் பேச்சை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அண்ணாமலை தனது விமர்சனத்தில் முதல்வர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் பேச்சு
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு இன்று பதில் அளிப்பேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். அதன்படியே இன்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தனது பேட்டியில், தமிழ்நாடு அரசுதான் மத்திய அரசுக்கு பணம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை பிரதமர் மோடி கேட்கவில்லை.

பதிலடி
ஆனால் முதல்வர் ஸ்டாலின் வரிந்து கட்டிக்கொண்டு வந்து பிரதமரிடம் பணம் கேட்கிறார். கட்சத்தீவு பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை, கண்டிப்பாக ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மோடி வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடினமாக உழைத்தனர். நேற்றைய நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை தோளில் தூக்கி, மண்ணை நேசித்து பேசினார் பிரதமர். சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான்;

அண்ணாமலை பதில்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனும் பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி. பிரதமர் மோடி உங்களை போன்ற பலரை பார்த்துள்ளனர். ஸ்டாலினின் அரசியலில் கும்மடிபூண்டி - கோபாலபுரம் வரை மட்டுமே. ஆனால் மோடியின் அரசியல் என்பது உலக அளவில் சென்றுவிட்டது. உலகின் சிறந்த தலைவராக மோடி இருக்கிறார்.

ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும்
அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை ஸ்டாலின் கட்டிப்பிடித்தார். அவருக்கு முத்தம் மட்டுமே கொடுக்கவில்லை. இதுதான் அவரின் சாதனை. இரண்டு அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி 1 வாரத்தில் புத்தகம் வெளியிடுவோம். 2 அமைச்சர்கள் பதவி விலகும் அளவிற்கு ரூ.100 கோடியை தாண்டும் ஊழல் பற்றி வெளியிடுவோம்.

2 ஊழல்கள்
ஜூன் முதல் வாரத்தில் இரண்டு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பற்றி வெளியிடுவோம். வந்துகிட்டே இருப்போம்.. நீங்கள் திராவிட மாடல் பற்றி பேச உங்கள் ஊழல் பற்றி பேசுவோம். நம்பர் 1 முதல்வர் என்றால் நீங்கள் எதற்கு நம்பர் 1 முதல்வர் என்று இந்தியாவிற்கே தெரியும். 2 அமைச்சர்கள் பதவி விலகும் வரை விட மாட்டோம், என்று அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications