காவிரி விவகாரத்தில்.. கர்நாடகாவுக்கே ஆதரவு... பாஜக பொறுப்பாளர் சிடி ரவி சூசகம்
சென்னை: காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரைத் தனது ஆதரவு கர்நாடகாவுக்கே இருக்கும் என்ற வகையில் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் தங்கள் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுகவை நிராகரிக்க 100 காரணங்கள்
பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தற்போது தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற புத்தகம் பாஜக சார்பில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை அக்கட்சியின் தேசிய செயலாளரும் தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி வெளியிட்டார்.
காவேரி விவகாரம்
அப்போது, காவேரி விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்கு எதிராகக் கர்நாடகாவில் பாஜக போராட்டம் நடத்தியது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குக் கபடி விளையாட்டை எடுத்துக்காட்டாகக் கூறிய சிடி ரவி, கர்நாடகாவே முக்கியம் என்பது போலப் பதில் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "உங்கள் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் கபடிப் போட்டி நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
யாருக்கு ஆதரவு
அப்போது நீங்கள் யாருக்கு ஆதரவாக இருப்பீர்கள்? உங்கள் ஊருக்கு தானே ஆதரவாக இருப்பீர்கள். அதுபோலத் தான் இதுவும்! பாஜக ஒரு தேசிய கட்சி. எனவே நாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நீதியையே அளித்து வருகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நாங்கள் செயல்பட மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
சிடி ரவி
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைந்தபோது, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை, கன்னட வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் சிடி ரவி. கடந்த ஆண்டு அவர் பாஜகவின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார்.