2024 நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு? விளக்கம் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: கடந்த சில நாட்களாக அதிமுக-பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதே நிலைப்பாடு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடருமா? என்கிற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் மறைந்த தலைவர்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது ஏற்கெனவே அதிமுக-பாஜக இடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில், சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்தது இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் போக்கை தீவிரப்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து பாஜக எதிர்கொள்ள இருந்த நிலையில் இப்படியான அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், "எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, "மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் கூட்டணியா இல்லையா என்பது அப்போது முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஈடுபட்டிருந்தது. அப்போது அண்ணாமலை பேசிய கருத்துக்கள்தான் அதிமுக-பாஜக மோதல் உச்சமடைய காரணமாக சொல்லப்படுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு தமிழ் மாநாடு நடக்கிறது. ஜூன் மாசத்தில் 10 நாட்கள் நடக்குது. முதல் நாள் ராஜாஜி பேசினார். 2-வது நாள் இன்னொருத்தர் பேசுறார். 3-வது நாள் இன்னொருத்தர் பேசுறார். 4-வது நாள் பிடி ராஜன் பேசுகிறார்.
ஆனால் அந்த மாநாட்டு அழைப்பிதழில் சம்பந்தமே இல்லாத, பெயரே இல்லாத அண்ணாதுரையையும் கூட கூட்டிகிட்டுப் போறார். மேடைக்குப் போய் அண்ணாதுரைக்கு மைக் கிடைக்கிறது. பேசுவதற்கு முன்னர் மணிமேகலை என்ற குழந்தை மிக அற்புதமாக தமிழ் சங்க இலக்கியப் பாடலைப் பாடுகிறார். உடனே மைக் எடுத்த அண்ணாதுரை என்ன சொல்றாரு? ஓ.. இந்த பொண்ணு மணிமேகலை நல்லா பாடுச்சு.. இதே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லி இருப்பாங்கன்னா... உமையவள் பாலைக் குடித்துதான் இந்த மணிமேகலை பாட்டு பாடினாள் என கட்டுக் கதை கட்டி விட்டிருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்துவிட்டது. மக்கள் இதை எல்லாம் நம்பமாட்டார்கள் என அண்ணாதுரை பேசினார்.
6-வது நாள் அதே கூட்டத்தில் முத்துராமலிங்க தேவர் அதே கூட்டத்தில் பேச வேண்டும். ஆனால் 5-வது நாளே மேடைக்குப் போகிறார் முத்துராமலிங்க தேவர். பிடி ராஜன், நீங்க பேசக்கூடாது என்கிறார். இல்லை நான் பேசுவேன்- மேடை நாகரீகத்தை இன்று நான் முறியடிக்கப் போகிறேன் என்று மேடையேறினார் முத்துராமலிங்க தேவர். முத்துராமலிங்க தேவர் சொன்னார், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் யார் இங்கு வந்து உமையவளைப் பற்றி தப்பாகப் பேசியது? என கேட்கிறார். எல்லோரும் பம்முகிறார்கள். பிடி ராஜன் வாயில் இருந்து வார்த்தையே வரவில்லை. அண்ணாதுரையை மதுரைக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். வெளியே போக முடியவில்லை.
முத்துராமலிங்க தேவர் உக்கிரமாக இருக்கிறார். அப்போது முத்துராமலிங்க தேவர் சொல்கிறார், இன்னொரு முறை நான் கடவுளை நம்பமாட்டேன்; நான் கடவுள் இல்லை என்று சொல்லுபவன் கடவுளை நம்புகிறவர்களை பற்றி பேசினால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்திருக்கிறது. இன்னொரு முறை தமிழகத்தில் கடவுளை நம்பாதவர்கள், கடவுளை நம்பக் கூடியவர்களைப் பற்றி தவறாகப் பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்திலே அபிஷேகம் நடக்கும் என்று சொன்னார். அதன் பிறகு மன்னிப்பு கேட்டு ஓடிவந்த கும்பல்.. பிடி ராஜன், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தவர்கள்" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications