சென்னையின் ஹாட் ஸ்பாட்டாக மாறப்போகும்.. வடசென்னையின் முக்கிய பகுதி.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: வடசென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக விம்கோ நகர் உருவாகி வருகிறது. வரும் நாட்களில் விம்கோ நகர் மிக முக்கியமாக போக்குவரத்து ஹப்பாக உருவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஆகியவை இணைந்து, புறநகர், மண்டல மற்றும் நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

விம்கோ நகர் போக்குவரத்து மையம்
இந்த மேம்பாட்டின் ஒரு பகுதியாக, விம்கோ நகர் ரயில் நிலையத்தின் புறநகர் நடைமேடைகளை 550 மீட்டர் நீட்டிக்க இந்திய ரயில்வே முன்மொழிந்துள்ளது. இதனால் கொல்கத்தா மற்றும் பிற கிழக்கு நோக்கிய எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் இங்கு நிறுத்த முடியும். இத்திட்டம் விம்கோ நகர் நிலையத்தை ஒரு உள்ளூர் நிறுத்தமாக இருந்து மண்டல வாயிலாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பயணிகள் கூட்டம் குறையும்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) மூத்த அதிகாரி ஒருவர், "விம்கோ நகரில் முழுமையான ரயில் நிலையத்தை, காத்திருப்பு அறைகள் மற்றும் பயணிகள் வசதிகளுடன் உருவாக்க இந்திய ரயில்வேக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்த வசதிகளுக்காக மெட்ரோ நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், பல மாதிரி ஒருங்கிணைப்பு திட்டம் ரயில்வேயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விம்கோ நகர் மாஸ்டர் திட்டம்
இந்த மாஸ்டர் திட்டத்தில், நிலையத்திற்கு அருகிலுள்ள ITC நிலத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு பேருந்து நிலையம், மெட்ரோவுக்கு சொந்தமான இடத்தில் ரயில்வே டிக்கெட் கவுண்டர், மற்றும் மெட்ரோ கான் கோர்ஸை ரயில்வே நடைமேடைகளுடன் நேரடியாக இணைக்கும் ஆறு மீட்டர் உயர நடை மேம்பாலம் ஆகியவை அடங்கும். மேலும், மின் படிக்கட்டுகள், லிஃப்ட்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான தனிப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள், ஷேர் ஆட்டோ நிறுத்தங்கள் மற்றும் அகலமான நடைபாதைகள் ஆகியவையும் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.
வருகிறது விம்கோ நகர் சுரங்கப்பாதை
மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து திருவெற்றியூர் மற்றும் விம்கோ நகர் நிலையங்களுக்கு இடையே ஒரு சுரங்கப்பாதையை உருவாக்கி வருகின்றன. இது செப்டம்பர் 2025-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத் தேவைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளதால், கும்டா மற்றும் சிஎம்ஆர்எல் ஆகியவை கார்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இறங்குமிடங்களை உருவாக்க நிலப் பரிமாற்றங்களை பரிசீலிக்குமாறு ரயில்வேயை வலியுறுத்தியுள்ளன.
விம்கோ நகர் திட்டத்திற்கு இந்திய ரயில்வேயின் 2023-24 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு உறுதுணையாக உள்ளது. சென்னையின் புறநகர் நிலையங்களை மெட்ரோ வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு மாதிரி குரோம்பேட்டிலும் ஆராயப்பட்டு வருகிறது. அங்குள்ள வாகன சுரங்கப்பாதை புதிய நிலைய அணுகல் புள்ளிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
குரோம்பேட்டைக்கான ஒரு கருத்தியல் திட்டத்தை CUMTA தயாரித்துள்ளது. இதில் ஜிஎஸ்டி சாலை பேருந்து நிறுத்தங்கள், குரோம்பேட்டை ரயில் நிலையம், வரவிருக்கும் மெட்ரோ நிலையம் மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலம் முன்மொழியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications