டிரம்ப்பை படுத்தி எடுக்கும் ஈரான்.. அமெரிக்கா சொல்லும் எதையும் ஏற்பதாக இல்லை.. அடுத்து என்ன!
ஜெனிவா: வளைகுடா போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நேற்றைய தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் கூட இதில் எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்து இரு நாடுகளும் முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பிலிருந்து முரணான தகவல்கள் வெளியாகி வருவது உலக அரங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது மற்றும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வது ஆகிய முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

அமெரிக்கா
அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாஷிங்டன் திரும்பியதும் இது குறித்து விரிவாகப் பேசினார். ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் உடனடியாக விடுவிக்கப்படாது என்றும் பேச்சுவார்த்தையில் ஈரான் காட்டும் தொடர் முன்னேற்றம் மற்றும் எதிர்காலப் பொறுப்புகளின் அடிப்படையிலேயே சொத்துகளை விடுவிப்பது அமையும் என்றும் வான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
திட்டவட்டம்
ஈரானின் வெறும் வாக்குறுதிகளை நம்பி அமெரிக்கா செயல்படாது என்றும் அவர்களின் செயல்களைக் கண்காணித்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் ஈரானுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக வான்ஸ் தெரிவித்தார். ஆனால் ஆய்வாளர்கள் ஈரானுக்குள் சென்ற பிறகு அவர்கள் எவ்வாறு செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கண்காணித்த பின்னரே தங்களின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அமையும் என்றும் அவர் விளக்கினார்.
ஈரான்
அமெரிக்காவின் இந்த கருத்துகளை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமைக்குக் கூடுதல் அனுமதிகளை வழங்குவது குறித்து எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும் தற்போதைய நடைமுறைகளின்படியே ஆய்வுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், பொருளாதார முற்றுகை தளர்த்தப்பட்டு, முடக்கப்பட்ட சில சொத்துக்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானுக்கான மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகள்
இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றுமொரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது தொடர்பான விதியின் கீழ் மொத்தம் 12 பில்லியன் டாலர் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கான தேவையான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே கத்தார் நாட்டின் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், சுவிட்சர்லாந்து பயணத்தின் போது இதற்கான இறுதி பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது இந்த சொத்துக்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டன என்ற ஈரானின் கருத்து. ஆனால், வரும் காலத்தில் ஈரானின் செயல்பாடுகளைப் பொறுத்தே சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்பது அமெரிக்காவின் கருத்தாக இருக்கிறது.
பின்னணி
கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் மூலம் அமெரிக்க ஆதரவு பெற்ற மன்னர் ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, அதன் சொத்துக்களும் முடக்கப்பட்டன.
தற்போது முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துகளின் துல்லியமான மதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் மதிப்பு 100 பில்லியன் டாலரை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த முடக்கப்பட்ட சொத்துக்களே தற்போது அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையின் மிக முக்கிய மையப்புள்ளியாக விளங்கி வருகின்றன. தனது சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே ஈரானின் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications