திருவள்ளூருக்கு திருப்புமுனை.. வேகமெடுத்த பணிகள்! அறிவுசார் துறையில்.. முன்மாதிரியாகும் தமிழ்நாடு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 'அறிவுசார் நகரம்' அமைக்கப்படும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு அரசின் 2022-2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவுசார் நகரம் குறித்து அறிவிப்பு முதன் முறையாக வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும் என்றும், அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் அருகருகே, நவீன நகரத்தில் அமைந்திருக்கும். பசுமையான வாழ்விட சூழலில் அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கத்தை உத்வேகத்துடன் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்நகரம் திகழும் என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது.
இந்த நகரில், உயிரின அறிவியல் (life science), வேளாண் தொழில்நுட்பம் (agri tech), கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு (architecture and design), வான்வெளி மற்றும் பாதுகாப்பு (aerospace & defense), நகர்திறன் (mobility), நிதி தொழில்நுட்பம் (fintech), தொலைத்தொடர்புகள் (telecommunication) போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சியும், புத்தாக்கத்தையும் வளர்க்கும் பணியை தமிழ்நாடு அறிவு சார் நகரம் மேற்கொள்ளும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த நகரம் அமைப்பதற்காக முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
மொத்த நகரம் அமைய 1703 ஏக்கர் தேவை. இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்படுள்ளன. இதில் தற்போது 413.25 ஏக்கரில் 'அறிவுசார் நகரத்திற்கான' உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள 'டிட்கோ' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மூன்று கட்டமாக இந்த பணிகள் மெற்கொள்ளப்பட இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற கல்வி நகரங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள் ஒருங்கே அமைந்தார் போல இருக்கும் பகுதிகள், கல்வி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுக்கின்றன. எனவேதான் இந்தியாவிலும் இதுபோன்ற நகரங்களை அமைக்க மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தேசிய அளவில் இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறுகையில், "உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் உலகளாவிய புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் கிளையோடு அறிவுசார் நகரம் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சி, மேம்பாடு, அறிவுசார் தொழில் மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். தமிழக பொதுத்துறை நிறுவனங்களான தொழில் வளர்ச்சி நிறுவனம், சிட்கோ போன்றவையும் இதில் முக்கியப்பங்கு வகிக்கும்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications