சென்னையில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி தம்பதியை தாக்கிய இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த மக்கள்
சென்னை: சென்னை கேகே நகர் பஜார் சாலையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் குழந்தையுடன் சென்ற தம்பதியின் வாகனம் மீது மோதினர். இதில் அவர்கள் தட்டிக்கேட்டதால், அந்த தம்பதியினரை மதுபோதையில் இளைஞர்கள் தாக்கினர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் இளைஞர்கள் இரண்டு பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சமீப நாட்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. போலீசாரும் இது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் இது போன்ற சம்பவங்கள் அடங்கியபாடில்லை. அப்படித்தான் நேற்று முன்தினம் சென்னை கேகே நகர் பஜார் சாலையில் இரண்டு வாலிபர்கள் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் முன்பாக தம்பதியினர் குழந்தையுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளர். இதில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் தம்பதியின் வாகனம் மீது மோதியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் மதுபோதையில் வந்த இளைஞர்களை சத்தம் போட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் தம்பதியினரை திட்டியுள்ளனர். தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தம்பதியினரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தம்பதி மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியும் அங்கிருந்தவர்கள் இளைஞர்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள், மதுபோதையில் தம்பதியிடம் தகராறில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் கூடுவது தெரிந்ததும், இளைஞர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயற்சித்தனர். எனினும் நாலாபுறமும் சுற்றி நின்று அவர்களை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சாலையில் கூட்டமாக திரண்ட மக்கள் இரண்டு இளைஞர்களை பிடித்து தாக்குகின்றனர். தப்பி செல்ல முயலும் ஒருவரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்றும்.. இங்கே இருந்து போ.. என்றும் கூறுவது போல் பதிவாகி இருந்தது.
மதுபோதையில் விபத்தையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தம்பதியை தாக்கவும் செய்கிறீர்களா? என்ற ஆவேசத்துடன் இரண்டு இளைஞர்களையும் பொதுமக்கள் தாக்கிய சம்பவத்துக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "எல்லாவற்றையும் அரசே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இது போன்ற ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கும் போது தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications