பூவ தொடுத்து சேலை மடிச்சு பொண்ணு வந்தாச்சு.. கோவை டூ தைவான் காதல்.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம்
கோவை: கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் தைவான் நாட்டுப் பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜாதி, மதம், இனம், நாடு, மொழி என அனைத்து விஷயங்களையும் கடந்ததுதான் காதல். காதலிப்பதென்பது எவ்வளவு சவாலான காரியமோ, அதைவிட சவாலான காரியம் தாங்கள் விரும்பும் நபரிடம் அதைச் சொல்வது. ஒருவழியாக அவர்களிடம் காதலை சொல்லி கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்துக்குள் இணைவது வெகு சிலரே.

அந்த வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, இரு பெற்றோர்களின் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் கே.எஸ்.வைஸ்ணவ் ராஜ். இவர், சிங்கப்பூரில் சுற்றுசூழல் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். வைஸ்ணவ் ராஜ் தைவான் நாட்டில் எம்.எஸ் படித்து அங்கு வேலை பார்த்து வந்தார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஜிம்மி சாங், மிக்கி வாங் தம்பதியின் மகள் கிளாடியா சாங். கிளாடியா தற்போது ஆசிரியாகப் பணிபுரிகிறார். வைஸ்ணவ் ராஜ் தைவானில் வேலை செய்து வந்தபோது, கிளாடிய என்பவருடன் சேர்ந்து சமூக சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்தப் பழக்கவழக்கம் இருவருக்குமிடையே காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, வைஸ்ணவ்ராஜ், கிளாடிய இருவரும் தங்கள் பெற்றோரிடம் தங்களுடைய காதல குறித்து தெரிவித்துள்ளனர். அவர்களும் பச்சைக் கொடி காட்டவே, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய உள்ள நடைமுறைகளைச் செய்து, திருமணம் சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.
திருமணம் சொந்த ஊரில் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. மங்கள வாத்தியத்துடன் மணமக்கள் வேட்டி, சேலை மாலை அணிந்து வேதம் முழங்க தாலிக் கயிற்றை மணமகள் கழுத்தில் மணமகன் கட்டினார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தைவான் நாட்டில் இருந்து வந்த பெண்ணின் உறவினர்கள்,நண்ர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், இரவு விருந்தாக தமிழர்களின் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இதுகுறித்து, வைஸ்ணவ், கிளாடியா கூறுகையில், ஒருவருக்கொருவர் சமூக சேவை பணியில் ஈடுபட்டபோது இருவருக்கும் பிடித்திருந்ததால் விரும்பினோம் என்றனர். கோவையைச் சேர்ந்த இளைஞர் தைவான் நாட்டுப் பெண்ணை காதலித்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications