இந்து சகோதர, சகோதரிகளை புண்படுத்துவது நோக்கம் இல்லை.. மன்னிப்பு கேட்டு கோவை பாதிரியார் வீடியோ
கோவை: இந்து சகோதர, சகோதரிகளை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை என்று மன்னிப்பு கோரி பாதிரியார் பிரின்ஸ் கால்வின் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். முன்னதாக இந்து மதம் குறித்தும், இந்துக்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக கோவை சிஎஸ்ஐ இமானுவேல் ஆலய பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை உப்பிலிபாளையத்தில் சிஎஸ்ஐ இமானுவேல் கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதிரியாராக பிரின்ஸ் கால்வின் என்பவர் இருந்து வருகிறார். தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் அனைத்தும் கோவை உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயத்தின் பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி கோவை உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தில் ஒரு ஆராதனை நிகழ்வு நடந்துள்ளது. அப்போது பிரின்ஸ் கால்வின் வழக்கம் போல் பேசியிருக்கிறார். அதில் இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியதாக வகையில் பிரின்ஸ் கால்வின் மீது புகார் எழுந்திருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே பாதிரியார் பிரின்ஸ் கால்வினுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் மற்றும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது சாதி, மத, இனங்களிடையே விரோத உணர்ச்சியை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சா்ச்சைக்குரிய பாதிரியாரின் விடியோ பதிவு யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக கோவை சிஎஸ்ஐ இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், " நான் பேசிய கருத்து இந்து சகோதரர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. இதனால் ஒரு சிலர் அந்த கருத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால் என்னுடைய நோக்கம் எவரையும் புண்படுத்துவது இல்லை.
கலாச்சார சீரழிவு மற்றும் சாதி ஏற்றத்தாழ்வு குறித்து நான் பேசினேன். என்னுடைய பேச்சால் புண்பட்ட இந்து சகோதர, சகோதரிகளிடம் நான் முழு மனதளவில் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வீடியோ பதிவில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பிரின்ஸ் கால்வினை கைது செய்ய வேண்டும் என இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மன்னிப்பு கேட்டு பாதிரியார் பிரின்ஸ் கால்வின் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுததி உள்ளது.












Click it and Unblock the Notifications